Saturday, December 22, 2012

கே.எஸ்.சிவகுமாரன்

தேவமுகுந்தனின் ‘கண்ணீரூடே தெரியும் வீதி’: புதுத்தளங்களை அறிமுகப்படுத்தும் சமூகப் பார்வை கொண்ட கதைகள்


‘நிர்மலன்’ என்ற புனைபெயரிலும் 1990கள் முதல் எழுதிவரும் புதிய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளரும் கணிதத்துறை விரிவுரையாளருமான “தேவமுகுந்த”னின் (தேவராசா முகுந்தனின்) சிறுகதைத் தொகுப்பான ‘கண்ணீரூடே தெரியும் வீதி” யை முதற் தடவையாகச் சில நாட்களுக்கு முன் படித்துப்பார்த்தேன்.

இத்தொகுப்பிலே 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் என் மனத்திரையில் ஓடிய எண்ணத்துளிகளை இங்கு பதிவு செய்ய முயல்கிறேன்.

இவருடைய கதைகளூடாகத் தெரியவரும் பண்புகள் எவை என்பவற்றைப் பொதுப்படையாகக் பார்ப்பற்கு இந்தப் பத்துகதைகள் ஒவ்வொன்று பற்றியும் சில குறிப்புகளைத் தரவேண்டியுள்ளது. முதலாவது கதையில் இவர் கூறவருவது என்ன வென்றால், பாதிக்கப்பட்டவர்கள் எவராயிருந்தாலும், அவரவர் உயிர்கள், சம்பந்தப் பட்டவர்களின் தனிப்பட்ட உறவுகள் காரணமாக, பெறுமதியானவை.

இதற்கு உதாரணமாக கதையின் ஆரம்பத்திலேயே கதைசொல்பவர், குடியிருக்கும் அறையின் சொந்தக்காரரின் தழுதழுத்த குரலில், இரண்டு இராணுவ இளைஞர்கள் யுத்தத்தில் மாண்டுபோனதை பாராபட்சமற்ற விதத்தில் நாமும்’ பச்சாதாபம் கொள்ளும் வகையில் தமது கருத்தோட்டத்தைக் கூறாமற் கூறுகிறார்.

மறு கோடியில் கதை சொல்பவரின் நண்பன் நகுலன் (போராளியாக இருக்கலாம்) (தனது தந்தையின் துயரத்துக்கும் உட்பட்டவன்) கோப்பாயில் இறந்துவிட்ட செய்தியும் கிடைக்கிறது.

“நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிலோடை வீட்டுக்குப் போகின்ற செத்த வீடுகளுக்குப்போக வேண்டும்” என்று கதை சொல்பவர் எழுதுகிறார். “கண்ணீரினூடே வீதி தெரிகின்றது” என்ற வாசகமும் இடம்பெறுகிறது. கதைசொல்லும் பாத்திரத்துக்குத் தர்ம சங்கடமான நிலைமை, ஆயினும் இரண்டு வகையில் இடம்பெற்ற மரணங்கள் வாசகர்களாகிய நமக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

இக்கதை நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டாலும், கதை சொல்லும் பாங்கு நவீனத்துவ ரீதியில் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இருந்த போதிலும், கதையுடன் நெருங்கிய சம்பந்தமில்லாமல் கதையின் பெரும்பகுதியில் சில சம்பவங்கள் சுவாரஸ்மான முறையில் எழுதப்பட்டிருந்ததும் கூட இடம் பெற்றிருப்பது ஒரு நல்ல “சிறுகதை”யில் இடம்பெறுவதை ஆசிரியர்கள் தவிர்க்கவேண்டும்

வழிகாட்டிகள்

நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையும் கவனத்திற்குரியது. கதையின் ஆரம்ப வசனங்களைக் கருத்தூன்றி கதாசிரியர் எழுதுவது மெச்சத்தக்கது.

இக்கதையிலே அடுத்து கதாபாத்திரம் தனது தொழில் நடைமுறைகளின் இடர்ப்பாடுகளை விவரணையாக நீணடதொரு ஒற்றைப் பந்தியில் விபரிக்கிறார்.

அடுத்து எல்லாத்துறைகளில் மாப்போல, கல்வித் துறையிலும் தமிழினம் எதிர்நோக்கும் பல தடைகளும், உதாசீனங்களும் வாசகர் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.

அரச அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியா வாசகர்கள் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். “மனதில் சிரிப்பு வந்தது” என்ற வாக்கியம் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது.

யதார்த்தச் செய்திகளை நீட்டிச் சொல்வது கதையின் பின்னணியை அறிய ஒரு வகையில் உதவக் கூடுமாயினும், அவ் விவரணையூடே கதாசிரியர் இடையில் புகுந்து வியாக்கியானங்கள் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

நல்லவேளையாக கதாசிரியர் இதனை அளவு மீறிச் செய்யவில்லை என்பது திருப்தியளிக்கிறது. “கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்துப்பிழை வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை மொழிகளுக்குச் சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டடான்” என்ற பகுதியில் இருந்து கதாசிரியருக்கு இதமான நகைச் சுவை உணர்வு இருப்பதைநாம் புரிந்து கொள்கிறோம்.

மகாநாட்டிலே பின்னர் என்ன நடந்தன என்பதை கதாசிரியர் தரும்போது பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். செய்திகளை செய்திவடிவில் கொடுக்கலாம். ஆனால் கதையில் வரும் பொழுது அச்செய்திகள் கதையின் செயல்களுக்கு சம்பவங்களை நேரடியாகவும், திருப்பங்களுக்கு ஏதோ வகையில் உதவும் விதத்திலும் இருத்தல் வேண்டும்.

முகுந்தனின் என்னல்களில் மற்றொரு ஆக்க ரீதியான ஒப்புவமை பிரயோகம்.

“ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, நல்ல தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக்காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரிபோன்று, வாமதேவன் இந்திரனின் மனதில் தோன்றினார்” என்று எழுதியிருப்பது சுவைக்கத்தக்கது.

நகைச்சுவையும், அங்கதமும் கொண்ட எழுத்து நடையை தேவமுகுந்தன் கொண்டிருப்பது எனக்கு உமாவரதராஜனின் எழுத்து நடையை நினைவுப்படுத்துகிறது. இந்தக் கதைமூலம் கணணித் துறையில் பயன்படுத்தப்படும் பல தமிழ் கலைச் சொற்களை நான் அறிந்து கொண்டேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவம் சில எல்லைக்கட்டுக்களைக் கொண்டிருப்பதனாலோ என்னவோ இப்பொழுது “புனைகதை சார ஆக்க இலக்கியம்’ பிரபல்யம் பெற்று வருகிறது. அதாவது கதைபோன்ற கட்டுரைக்கோவை என இந்த எழுத்து முறையைக் கூறலாம்.

லெ. முருகபூபதி தேவமுகுந்தன், அஷ்ரப் சிகாப்தீன், இளைய அப்துல்லா, அல் - அஸ்மத் போன்றோர் அத்தகைய எழுத்து வடிவத்தைக் கையாள்கின்றனர் என நினைக்கிறேன்.

இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள்போல ஆய்வைப் பாராட்டியே பேசுகின்ற” என்ற வாக்கியமும் என்னைக் கவர்ந்தது. கல்வித்துறையிலும் சமூக ஊழல்களை வெளிப்படுத்துகிறது இந்தப் படைப்பு இக்கதை ‘தகவம்’ பரிசு பெற்றதையும் இங்கு குறிப்பிடலாம்.

இடைவெளி

இது ஓர் அற்புதமான கதை. எழுதப்பட்ட முறையும் நன்று. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அலுவலகங்களில் சிங்களம் மாத்திரம் தெரிந்த ஊழியர்களும் தமிழர்களை தம்மோடு ஒத்தவர்களாய் மதிப்பதில்லை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்ள மொழியில் சில உரையாடல்கள் தந்திருப்பதும் அதன் சாராம்சத்தைத் தமிழில் தந்து தனது விமர்சனக் குறிப்பை ஜெகன் என்ற பாத்திரம் வாயிலாக தேவ முகுந்தன் தருகிறார்

இரட்டைக் கோபுரம்

தேவமுகுந்தன் தமிழ் வாசகர்களுக்குப் புதுப்புது உலகங்களைக் காட்டுகிறார். கொழும்பு, கோலாலம்பூர்-யாழ்ப்பாணம் என்று பலவிதக் கோலங்களைக் காட்டுவதுடன் தமிழ்-சிங்கள பாத்திர சிருஷ்டிiயும் புதுமை தருவது.

இது சுவாரஸ்யமான கதை. கதைக்குப் புறம்பான செய்திகள் இல்லை. சொல்ல வந்த செய்தியை நோக்கி கதை நகர்கிறது. ஈற்றில் கதையில் வரும் 'பற தெமிளு' என்ற பதம் கதையின் அடிநாதமாக இருப்பதற்காகவே கதையின் மன்னை நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன.

ஆழ்மனதில் குடிபுகுந்து இருக்கும் இனத்தவேஷம் வெளிப்படவதை நயமாக ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார். இம்மாதிரியான உத்திகளே கதையாக அமைகின்றன.

சின்ன மாமா

தேவமகுந்தன் அண்மைக் காலமாக அதிகம் வாசிக்கின்றார் என்பதனையும் உடன் நிகழ்கால எழுத்துக்கள் அவருக்குப் பரிச்சயமாய் உள்ளது என்பதும் அவர் அண்மைக் காலங்களில் எழதும் கதைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கதையும் உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்பு போல அமைந்திருக்கின்றது. ஆற்றல் மிகுந்தவர்கள் கூட வேஷதாரிகளாகவும் போலிகளாகவும் இருக்கக் கூடும் என்பதைக் கதை மூலம ;நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இவன்

பொதுவாகவே பெரும்பாலான தமிழர்களும் மலையாளிகளும் சுயநலம் கொண்டவர்கள் என்பது பொதுவான ஒரு அபிப்பிராயம். இதற்கு பூகோள ரீதியான காரணங்களும் இருக்கக் கூடும். இந்தக் கதையிலே கதாசிரியர் இந்த விபரிப்பு மூலம் இந்த அவதானிப்பை நிலைநாட்டுகின்றார். மற்றவர்கள் காத்திருக்க தங்களுக்குள்ளேயே பத்திரிகைகளை மாற்றிமாற்றிப் படிக்கும் பழசுகளை நினைக்க இவனுக்கு சினமாயிருந்தது. பார்த்தால் பெரிய மனிதர் போலிருக்கும் இவர்களின் சிறுமைத்தனத்தை எண்ண வெறுப்பாயிருந்தது. இவர்களுடன் வாதிட்டுக் கதைக்க முடியாது.

இந்தக் கதைதில் வரும் பாத்திரம் சுயசரிதைப் பாங்கில் தனது நாளாந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவது நமது அன்றாட வாழ்வு நிலைமைகளில் சிலவற்றை யதார்த்த பூர்வமான சித்தரிப்பாக அமைகின்றது. இன்னொரு அத்தாட்சி வெலை கிடைப்பதற்கு கல்வித் தகுதி மட்டும் போதாது செல்வாக்கும் பணமும் தேவையென்ற உண்மை இவனுக்கு நான்கைந்து நேர்மகத் தேர்வுகளுக்குப் போய்வந்த பின்ன்ர புரிந்தது.

ஏமாற்றங்களும் விரக்திகளுந்தான் ஒருவனை வன்முறையாளனாக மாற்றுகின்றனவோ?

'இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள். '

இதுவும் ஒரு யாதார்த்த உண்மை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் படித்து தகுதிக்கேற்ற வேலைகிடைக்காத சராசரி யுவன் மீது பச்சாத்தாபம் தான் ஏற்படுகின்றது.

இவன் நல்லாய்ப் படித்த பெடியனாம் இப்ப இலேசாய்த் தட்டிப் போட்டுது போல..நெடுகலும் சங்கத்துக்குள்ளேயே திரிகிறான். இடைக்கிடை தன்பாட்டில சிரிக்கிறான்... ' அவர்கள் கதைத்தது இவனுக்கு மெதுவாகக் கேட்டது.

என்று கதை முடிகின்றது.

கூட்டத்தில் ஒருவன்

கொழும்பில் மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக் கொலங்களை நிதர்சனமாக எழுதும் தமிழ் அல்லது முஸ்லிம் எழுத்தாளர்கள் இல்லை என்றெ சொல்லலாம். இந்தக் குறைபாட்டை நீக்குவது பொன்று தெவமகுந்தன் எழுதுவது எனக்கு உவப்பாக உள்ளது. இக்கதையில் அற்புதமாக அவர் சுட்டிக்காட்டும் பாசாங்குகள் நயமாய் அமைகின்றன. சி.சிவசேகரம், உமா வரதராஜன், அஷ்ரப் சிகாப்தின் போன்றொர் எழுதுவது போன்ற நையாண்டி நோக்கு தேவமுகுந்தனிடமும் இருப்பதை அவரது எழுத்துக்களில் காண்கிறோம்.

மரநாய்கள்

1993 இல் பிரசுரமான இந்தக்கதை சுட்டும் சம்பவங்கள் இந்திய அமைதி காக்கும் படையின் யாழ்ப்பாண அட்டகாசங்கள் தொடர்பானது. இது குறிப்பால் உணர்த்தும் ஒருவகை. ரஞசகுமாரின் 'கபரக்கொய்யா' போன்றது.

கதையின் முடிவுப்பகுதி:

'அண்ணாஇ கோழியைப் பிடித்துக் கொண்டு போட்டாங்கள்...'

வாழைகளுக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்த தமயன் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்:

'மரநாய்களைத் துரத்த வேண்டும்'

ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த மட்டில் இந்தத் தொகுதி ஒரு புதிய வரவேற்கத் தக்க ஆக்க இலக்கியம். தேவமகுந்தன் ஒர குறிப்பிடத் தக்க ஒரு சிறுகதையாசிரியர் என்பதாகும்.

நன்றி : தினகரன் ( 23.12.2012 , 7.1.2013)

.

No comments:

Post a Comment