Saturday, March 2, 2013

ஓட்டமாவடி- அறபாத்

எனது குருநாதர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் ஊடாக உங்களது' கண்ணீரினூடே தெரியும் வீதி ' கிடைத்தது.அவ்வப்போது உங்கள் கதைகளை வாசித்து சிலாகித்திருந்த எனக்கு ஒரு தொகுப்பாக கதைகளை படித்தபோது எழுந்த உணர்வுகளில் நல்லதொரு கதை சொல்லியை கண்டடைந்த மகிழ்வும்,நிறைவும் ஏற்பட்டது.

பிறந்த மண்ணின் வலியும் இனத்திற்கெதிராக ஏவி விடப்படும் அடக்கு முறையும் ஆர்ப்பட்டமின்றி உங்களின் எழுத்தில் வந்து சேர்ந்திருக்கின்றது.தலை நகரத்தின் நெருக்கடி மிக்க மன அவஸ்தையை உணர்வுபூர்வமாக அனுபவித்தவன் நான்.தமிழ்மக்களை புலிகளாக பார்த்த ஒரு சமூகத்தின் பார்வை படித்தவனாயினும்,சக நண்பனாயினும் நம்புவதற்கு ஐயங்கொண்டிருந்த அக்காலங்களை கலை நேர்த்தியுடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

இது மிக முக்கியமாக பதிவு என நினைக்கின்றேன்.

உங்கள் கதைகளில் ஊடுபாவும் தோல்வியின் ரணங்களும், ஆற்றாமையும், கையறு நிலையும் இது வரை தமிழ் மக்களை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.இன்னும் சிங்கள மக்களில் கணிசமானோர் புலிகளின் குரலாகத்தான் உரிமைக்கோசங்களை பார்த்து வருகின்றார்கள்.

உங்கள் கதைகளுக்கு மிகப்பொருத்தமான அறிமுகத்தை பேராசிரியர் நுஃமான் வழங்கியிருக்கின்றார்.பல கதைகளை அவர் சிலாகதித்துப்பேசியிருக்கின்றார். அதில் முழுமையாக நானும் உடன்படுகின்றேன். எழுதுவதென்பது தவம் .நெருக்கடிமிக்க சூழலில் மன அவசங்களையும் தாண்டி கணதியான கதைகளை எழுதிவரும் உங்கள் பணி தொடர வேண்டும்.இத்தொகுப்பு நிச்சய்ம் உங்களின் கதைகள் பற்றி நின்று பேசும் ஆவணம்.என்பது மிகையல்ல.

அன்புடன்

ஓட்டமாவடி- அறபாத்