Saturday, December 29, 2012

மேமன்கவி


தேவமுகுந்தனின்; 'கண்ணீரினூடே தெரியும் வீதி'- குறியீடாகி இருக்கும் தமிழ் இளைஞனின் வாழ்வு

-மேமன்கவி-

அச்சக்லையின் வருகையும் உரை நடையின் தோற்றமும் இலக்கியத்தை உள்; வாங்கும் முறைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாற்றம், பிற்காலத்தில் எதிர்; கொள்ளப்பட்ட பல்விதமான கோட்பாடுகளான அமைப்பியல், பின்-அமைப்பியல்;, கட்டவிழ்ப்பு, பின்-நவீனத்துவம் ஆகியவற்றினால் மொழியில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஊடாக எல்லா வகையான பிரதிகளும்; கட்டவிழ்ப்பு வழியாக புதிய வாசிக்குப்புக்கு உட்படுத்தியது.

அந்த வகையில் ஒரு சிறுகதைத் தொகுப்பினையோ,கவிதைத் தொகுப்பினை பயிலத் தொடங்கும் பொழுது, அத்தொகுப்புகளில் அடங்கியுள்ள படைப்புக்கள், எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளனவா? என்ற தேடலுடன் பயிலப்படுவதுண்டு.அவ்வாறான தேடலுக்கான காரணம,; அப்படைப்புக்களுக்கான படைப்பாளியின் ஆக்கத் திறன், கருத்துநிலை போன்றவற்றின் படிமுறை வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளத்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால், படைப்பாளி தொகுத்து தந்த வரிசையை குலைத்து ஒரு புதிய வரிசையை வாசகப் பார்வையில் உருவாக்கி, (இங்கு நாவல் ஒன்றில் அத்தியாயங்களை வரிசை மற்றுதலாக இருக்கும்) புதிய வாசிப்புக்காக கட்டவிழ்க்கின்ற அத்தருணத்தில் படைப்பாளி தன் படைப்புத் தொகுப்புக்குள் வெளிப்படுத்தும்; கருத்து நிலைக்கு மாறான, அல்லது படைப்பாளி எண்ணிராத ஒரு கருத்து நிலையை வாசகப் பார்வை உருவாக்க கூடும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலே வாசகப் பிரதியின் உருவாக்கம் நிகழ்கிறது.

காலச்சுவடு வெளியிடாக வெளிவந்திருக்கும் தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' எனும் தொகுப்பில், அவர் தொகுத்து தந்திருக்கும் வரிசையில், அத்தொகுப்புக்குள் அடங்கி இருக்கும் கதைப் பிரதிகளை முதல் வாசிப்பில் அத்தியாயங்களை குலைந்து போன ஒரு நாவலை வாசித்து முடித்த ஒர் உணர்வே எனக்கு ஏற்பட்டது. இப்பொழுது நான் ஒரு வாசகனாக அத்தொகுப்புக்கான கதைப் பிரதிகளை, அப்பிரதிகளில்; சித்திரிக்கபட்ட சம்பவங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, அப்பிரதிகளை இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்திய பொழுது, எனக்கு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரு தமிழ் இளைஞனின் வாழ்க்கையை சித்திரிக்கும்; ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பு கொண்ட ஒரு நாவல் கிடைத்தது.

2.இப்படைப்புப் பிரதியின் கதைச் சுருக்கம்;

வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட கொடூரங்களை நேரில் கண்ட ஒரு சிறுவன் (மரநாய்கள்) ,வளர்ந்து கொழும்புக்கு வந்து பல்கலைக்கழத்தில் இணைந்து பயிலும் காலத்தில், நகரத்திலும் அவனது ஊரிலும் சிங்களவர்கள் தமிழர்கள் மீது கொண்டிருந்த குரோதம், கண்காணிப்பு, சந்தேகம் ஆகிவற்றின் காரணமாக, அவனும், அவனது நண்பர்களும், அவனது தம்பி போன்றவர்களும், அவர்கள்; தமிழர்கள் என்ற ஒரே காரணமாக கைது செய்யப்படுகிறார்கள்;, காணாமல் போகிறார்கள்.(கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா, ஒரு சுதந்திர நாள்) இவ்வாறான சூழலில் அவன் தன் படிப்பை முடிந்து வேலைத் தேடி அலைகிறான்.(இவன்)கல்வித்துறையில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலையின் பொழுது கல்வி சம்பந்தமான கருத்தரங்குகளில் கலந்து கொள்கிறான்.(வழிகாட்டிகள்) அதே வேலையில் இருக்கும் பொழுது, அவனுடன் பணி புரியும் சிங்கள நண்பர்களுடன் மலேசியாவுக்கு மேற்படிப்புக்காக போகிறான். அங்கும் சேர்ந்து- உண்டு உறங்கிய சிங்கள் நண்பர்கள் மனதில் இருக்கும் தமிழர்கள் மீதான குரோதம் தொடர்கிறது. அவனுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் சிங்கள நண்பனின் பிள்ளை கொழும்பில் சுகவீனம் காரணமாக இறந்து போக, அவன் கொழும்பு திரும்ப, இவனும் அவனது சக நண்பர்களும் ஒடியாடி ஏற்பாடு செய்ய, கொழும்பு விமானம் நிலையம் தாக்கப்பட்டதன் காரணமாக, அந்த சிங்கள நண்பன் இலங்கைக்கு திரும்ப முடியாமல் போக, அதனால் குழப்பி போகும் அந்த சிங்கள் நண்பன் தமிழர்கள் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை குரோதத்தை வெளிப்படுத்துகிறான்.(இரட்டை கோபுரம்) மலேசியாவிருந்து நாடு திரும்பிய பின் ஒரு சந்தர்ப்பத்தில, நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் அவன் பயின்ற பாடாசாலை பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறான்.(கூட்டத்தில் ஒருவன்) தொடர்ந்து அவன் பணி புரியும் அலுவலகத்தில் சக சிங்கள ஊழியர்களால், அவன் தமிழன் என்ற காரணத்தால் தொடர்ந்து அவன் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதும் தொடர்க்கிறது. ஒரு முறை அவனது மகனுக்கு சுகமில்லாம் போக, அவனை நவலோகா வைத்தியச்சாலை அழைத்துச் செல்ல, அந்த நேரத்தில் அப்பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதன் காரணமாக வீடு திரும்ப, அந்த பகுதியில் ஆட்டோ தேடி அலைகிறான். மறுதாள் அலுவலகம் திரும்ப, நேற்று அவன் வேலைக்கு வராமல் விட்டமையும், நவலோகா ஆஸ்பத்திரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பின் பொழுது இவன் ஆட்டோ தேடி அப்பகுதியில் நடமாடியதை அவனுடன் பணி புரியும் சக சிங்கள ஊழியர்கள் சிலர் கண்டமை ஆகிவை இணைக்கபட்டு யாரோ பொலீஸுக்கு தெரிவிக்க அலுவலகத்தில் அவன் கைது செய்யப்படுகிறான்.(இடைவெளி)

3. முகுந்தனின் பிரதிகள் பேசும் விடயங்கள்

மேற்சொன்ன வரிசையில் என் வாசிப்புப் பார்வையில் ஒரு நாவலாக கட்டமைக்கபட்ட் இக்கதை பிரதிகளில் முகுந்தன் பின் வரும் விடயங்களை பற்றி பேசி என தெரியவருகிறது. 1. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் சிங்கள் மக்கள் எக்காரணம் கொண்டும்; தமிழ் பேசும் மக்களை நம்புவில்லை.என்னதான் கூட படித்து ஒரே அறையில் தங்கி, உண்டு உறங்கினாலும் சந்தேக கண்ணுடன்தான பார்த்தார்கள் (கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா, ஒரு சுதந்திர நாள், இரட்டை கோபுரம்,இடைவெளி);

2. இத்தகைய காரணமாக இந்த நாட்டு சிங்கள் மக்கள் தம் பிள்ளைகளை போருக்கு பலி கொடுத்த து போல் வட-கிழக்கு மக்கள் தம்பிள்ளைகளையும் பறி கொடுத்து இருக்கிறார்கள் கண்ணீரினூடே தெரியும் வீதி, சிவா)

3. கல்வித்துறையில் மற்றும் அரச நிர்வாகத்தில் போலித்தன்மை, பகட்டுத் தன்மை, சுயநலம் (வழிகாட்டிகள்)

4. வேலை இல்லாத இளைஞர்களின்; மனோநிலை, அதனை சமூகம் அர்த்தப்படுத்தி கொள்ளும் விதம்;.(இவன்)

5. கலை இலக்கியத்துறையில் மலிந்திருக்கும் போலித்தன்மையை எடுத்து காட்டுதல்(போகிற போக்கில் 'இவன்' பிரதியிலும்,முக்கியமாக பேசும் விடயம் என்ற வகையில் 'சின்னமாமா' எனும் பிரதியிலும்)

6. உயர் வர்க்க, மத்தியத் தர வர்க்க சமூகங்களில் வளர்ந்திருக்கும் பகட்டுததன்மையை, போலிமையை எடுத்துக் காட்டுதல்(கூட்டத்தில் ஒருவன்)

7. இந்திய இராணுவம்; வட-கிழக்கை ஆக்கிரமித்த பொழுது, தமிழ் பேசும் மக்கள் அனுபவித்த் இன்னல்கள்(மரநாய்கள்)

8. தமிழனே தமிழனுக்கு உதவாத நிலை, தமிழர்களுக்கு சிங்கள சகோதரர்கள்; உதவிய நிலை (;ஒரு சுதந்திர நாள்)

இவ்வாறாக முகுந்தனின் இத்தொகுப்பு கதை பிரதிகளை புதிய ஒழுங்கு அமைப்பில் வாசித்து மேற்கூறிய கருத்து நிலைகளை நான் கிரகித்துக் கொண்டாலும், இத்தொகுப்பிலுள்ள இடம் பெற்றுள்ள 'சின்னமாமா' என்ற கதைப் பிரதி, நான் சம்பவங்களின் அடிப்படையில் ஒழுங்கு அமைத்;;த வரிசைப்படி பார்த்தால்; அக்கதைப் பிரதி இறுதியாக மேற் கூறிய கதைச் சுருக்கத்திங் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்பிரதியை முற்றும் முழுதுமாக் தவிர்த்து 'இடைவெளி' என்ற பிரதியுடன் அந்த வரிசையை முடித்து, அப்பிரதிகளை ஒரு நாவலாக இணைத்து வாசித்த பொழுது, அன்றைய யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின்; வாழ்வியலின் யதார்த்தத்தை தாக்கதுடன் சொல்லி முடிக்கின்ற ஒரு நாவலை அப்பிரதிகளின் அத்தகைய இணைவு உறுதிச் செய்தது.

அது மட்டுமல்லாமல் அன்றும் சரி, இன்றும் சரி, இன்னும் தீராத பிரச்சினையாக இருக்கின்ற தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையின் நீட்சியினை, அவனது கைதுடன் முடிக்கின்ற அப்பிரதிவுடன் நான் ஒழுங்கு அமைந்த வரிசையானது, நான் மேலே குறிப்பிட்டது போல் அன்றைய யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின்; வாழ்வியலின் யதார்த்தத்தை தாக்கதுடன் சொல்லி முடிக்கின்ற ஒரு நாவலை உறுதிச் செய்த்ததோடு, வாசக மனதில் தொடர்ந்து அந்த நாவல் ஒடிக் கொண்டிருக்கும் ஒரு சூழலை தொடக்கி விடுகிறது.

4. இப்பிரதிகள் எழுப்பிய ஆச்சியத்துடான ஒரு கேள்வி

முகுந்தனின் இப்பிரதிகளை வாசித்த பொழுது பிரதான ஒரு கேள்வி எழுந்தது. 'அவன்'அதாவது நாம் உருவாக்கிய நாவலின் கதாநாயகன், அவனுடைய கணிசமான வாழ்வுப் பகுதியை கொழும்பு போன்ற நகர பகுதியில் கழிந்து இருக்கிறான். கொழும்பு நகரத்தை எடுத்து கொண்டோமானால் எல்லா பிரதேசங்களையும் சார்ந்த மூவீன மக்களும்;, எல்லா மட்டத்திலும், (கல்வி, உத்தியாகம், வியாபாரம்) வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் முகுந்தனின் அவனின் வாழ்வு ஒட்ட்டத்தில் எந்தவொரு முஸ்லிமும் வராமல் போனது ஏன்? என்ற ஆச்சரியத்துடனான ஒரு கேள்வி என் வாசகப் பார்வையில் எழுந்தது.(இன உணர்வுடன் நான் இந்த கேள்வியை கேட்க வில்லை. இப்பிரதிகளின் யதார்த்த வெளிப்படாட்டில் ஏற்பட்டுள்ள விடுபடுதலை சுட்டி காட்டத்தான் இந்த கேள்வி. இப்பிரதிககளில் முஸ்லிம் பாத்திரங்கள் வரத்தான் செய்கின்றன. அன்வர், நவ்சாத், திருமதி அஸ்வர். என்ற மாதிரி. ஆனால் அவர்கள் வந்து போகின்ற அப்பிரதிகளில் கடந்து போய்கின்ற பாத்திரங்களாக இருக்கின்றார்கள் தவிர, அவனின் வாழ்வின்; அசைவாக்கத்தில் முக்கியப் பங்கிளை வகிப்பவர்களாக இல்லை.

5.இன்னும்..... முகுந்தனின் இத்தொகுப்பு இடம்பெற்றுள்ள பிரதிகளை வாசித்து முடிக்கின்ற பொழுது, நாம் மேலே சொன்ன . முகுந்தனின் பிரதிகள் பேசும் விடயங்கள் பற்றிய குறிப்புக்களில்; எட்டாவது குறிப்பில் குறிப்பட்ட தமிழர்களுக்கு சிங்கள சகோதரர்கள்; உதவிய நிலையை சித்திரிக்க படைப்பாசிரியர் எடுத்து இருக்கும் 'வெளி' போதாது என்று நான் நினைக்கிறேன். அப்பிரிதிகளில் அத்தகைய பாத்திரங்களாக உப்புளும், ஜீனதாச அங்கிளும், பொர்ணாண்டோ அங்களும் அதுவும் தமிழனை காப்பாற்றாத கந்தசாமி என்ற தமிழர் வரும் சூழலில் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களை மேலும் படைப்பாசிரியர் தேடி அவனின் வாழ்வில் இடம் பெற செய்து இருந்தால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த, தமிழ் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை சித்திரிக்கும் ஒரு படைப்பில் அக்காலகட்டம் முதல் இன்று வரை தொடரும் இனப்பிரச்சினைக்கு-முரண்பாட்டுக்கு அடிப்படையாக காரணமாக இருப்பது யார்? என்ற கேள்விக்கான பதிலை தேடுவதற்கு துணை சேர்த்திருக்கும்; என எனக்கு பட்டது. மேலும், சமீப காலமாக போர்க் கால, ஈழத்து தமிழ் இலக்;கியப் படைப்புக்களை பயிலுகின்ற பொழுது, அப்படைப்புக்களில் அங்கதம் அப்பிரதிகளில் அங்காங்கே வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கு அந்தந்த படைப்பாளிகளின் நடை, குண இயல்பு ஆகியவைய காரணங்களாக சொல்லப்படலாம்;.அக்கூற்று மறுப்பதற்கில்லைத்தான். ஆனால் எனக்கு என்னவோ இக்காலகட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்வு மிகுந்த நெருக்கடி மிக்க துயரம் நிறைந்த ; வாழ்வாக இருந்த நிலையில், அத்தகைய நிலையை சித்தரிக்க வந்த படைப்புப் பிரதிகளில் அங்கதம் எட்டிப் பார்ப்பது என்பதற்;கு வேறு ஏதேனும் விசேடமான காரணிகள் இருக்குமோ? என்ற கேள்வி எனக்குள் எழுத்தான் செய்கிறது. அக்கேள்விக்கான பதில் அக்காலகட்ட பிரதிகளை ஆழமாக கட்டு உடைப்புக்கு உட்படுத்தும் பட்சத்தில் கிடைக்கக்கூடும் என எனக்குப் படுகிறது. முகுந்தனின்; இத்தொகுப்பிலும் இடைக்கிடையே எட்டிப்பார்க்கும் அங்கதம்; மேற்குறித்த விடயத்தை இங்கு என்னை பேச வைத்திருக்கிறது.

6.முடிவாக....

மொத்தத்தில், 80களுக்கு பின்னான ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் கொண்டிருக்கும் போக்கினை கணிசமான அளவுக்கு யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞன் ஒருவனின் வாழ்வை பின் புலமாக கொண்டு சிறுகதைப் பிரதிகளாக தந்து, புதிய வாசிப்பில் அச்சிறுகதைப் பிரதிகளை ஒரு நாவலாக வாசிக்க முடிக்கின்ற ஒர் அனுபவத்திற்கு வித்திடும் ஒரு புனைவுத் தொகுப்பை தேவமுகுந்தன் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' எனும் தலைப்பில் தந்திருப்பது, 80களுக்கு பின்னான ஈழத்து தமிழ் பேசும் சமூகத்தினரின் இளையத் தலைமுறையினரின் வாழ்வியலை பற்றி பேசும் ஒர் இலக்கிய ஆவணத்தை எமக்கு கிடைக்க செய்து இருக்கிறது. அத்தோடு இத்தொகுப்புக்கான 'கண்ணீரினூடே தெரியும் வீதி' என்ற தலைப்பும், ஈழத்து தமிழ் பேசும் சமூக் இளையத் தலைமுறையினரின் வாழ்வு என்பது, கண்ணீருடன் கூடிய நீண்டதொரு பயணத்தை தொடர்க்கின்ற ஒரு வீதியாகவும் இருந்திருக்கிறது என்பதை குறியீடாக பேசியும் இருக்கிறது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

நன்றி : மனமோகி ( டிசம்பர் 2012)

Monday, December 24, 2012

நெடுந்தீவு மகேஷ்


கண்ணீரினூடே தெரியும் வீதி

இனமுரண்பாடுகளின் வெளிப்பாடுகள் நாம் எதிர்பாராத வகையிலும், எதிர்பார்த்திராத உறவுகளிடத்திலும் இருந்து விரிந்தெழும் போது எமது மனம் அழுகின்றது. நம்பிக்கை சிதைவுறுகின்றது.

இச்சிறுகதை நூலில் கண்ணீரினூடே தெரியும் வீதி எனும் சிறுகதையை முதலாகக் கொண்டு பத்துச் சிறுகதைகளை தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியீடாகத் தந்துள்ளனர். கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவமுகுந்தன் தன்னை அகப்படுத்திக் கொண்டு தனிமையில் அனுபவித்த இன்னல்களையும், ஏமாற்றங்களையும் வாசகரின் உணர்வுகளை உசுப்பும் வகையில் தமிழ் இனிக்கச் சிறந்த கதைகளாக்கிக தந்துள்ளார்.

அவரது அநேகமான சிறுகதைகள் அவர் தாம் தொழில் சார்ந்துலவிய களத்தையும் உறவுகளைம் வெளிப்படுத்துகின்றன.

இவன் தொழில் தேடி அலைந்தே நாட்களை ஓட்டும் ஒருவன். அவனை அறியாதோர் பார்வையில் அவன் கேள்விக்குரியவனாகிறான். வேலைதேடி அலைம் இவனின் விரக்திக் கோலத்தின் வெம்மைகை; கூறும்கதையிது. நகைச்சுவை இழையோட கதை இவனின் நடத்தைகளை விளக்குகின்றது. அருமையான சிறுகதை.

வழிகாட்டிகள் எனும் சிறுகதை கல்விப்புலத்தில் கடiமாற்றுவோரின் சுயநலமும் பேராசைகளும் கடமைக்குப் புறம்பாக மேலெழுந்து அவர்களின் பதவிகளை கேலிசெய்யும் உண்மையைப் பகிரங்கப்படுத்துகின்றது. உண்மை சுடுகின்றது.

புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் பிரகாசிக்கும் ஒருவராக முன்னணியில் தோன்றும் தேவமுகுந்தன் திறந்த பல்கலைக்கழக கல்வித்துறை விரிவுரையாளராகப் பணி தொடர்கிறார். அருமையான பத்துச் சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பின் ஊடாக எழுத்துலகில் இமயமாக எழுந்து நிற்கின்றார். அவர் தனது தொடரும் ஆக்க இலக்கியப் பணியின் மூலம் மேலும் பல புதிய எண்ணக்கருக்கள் முகிழ்த்தெழ நவமான சிறுகதைகளை வெளிக்கொணருவார் என நம்புவோம்.

நெடுந்தீவு மகேஷ்

நன்றி : சுடர் ஒளி 19. 12.2012- 25.12.2012

Saturday, December 22, 2012

எஸ் . எல் . எம் . ஹனிபா


எனக்குப் பிடித்த தேவமுகுந்தனின் கதைகள்

இந்த வருடத்தில் முழுமையாகப் படித்து முடித்த சில சிறுகதைத் தொகுப்புகளில் தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' என்னளவில் முக்கியமாகப் படுகிறது. எழுதத் தொடங்கிய 21 வருடங்களில் (1990-2011) 15 வருடங்கள் அவர் எதுவுமே எழுதவில்லை. மிஞ்சிய ஆறு வருட காலங்களில் அவர் எழுதிய பத்துக் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

நம் ஒவ்வொரு நிஜ மனிதனுக்குள்ளும் இன்னுமொரு கனவு மனிதனும் இருக்கிறான். கலைஞனுக்குள் இந்தக் கனவு மனிதனின் இருப்பு அலாதியானது. அத்தகைய கனவு மனிதனின் பார்வையில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பல்வேறு அடுக்குகளின் குறுக்கு வெட்டு முகங்கள் பட்டு கதையாக கவிதையாக இசையாக ஓவியமாக ஏன் உரையாடல்களாக....

ஆனாலும் எழுத்து மூலமே நாம் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்கிறோம். இந்தப் பூவுலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் அன்பன் அ.முத்துலிங்கத்தை நான் ஒவ்வொரு வாரமும் தொட்டுக் கொள்கிறேன் என்றால் அதுவே எழுத்தின் மகத்துவம் என்பேன். இங்கும் தேவமுகுந்தனை எனக்குத் தெரியாது. நான் கண்டுமிலேன். ஆனாலும் அவர் எழுத்தைத் தொட்டதன் மூலம் அவரைத் தொடும் பாக்கியமும் கிட்டியது. அவரின் எழுத்தினூடே அவருடனான உரையாடலும் எனக்குச் சாத்தியமானது. ஒரு மனிதனின் எழுத்தோடு ஆத்மார்த்தமான பிணைப்பு உருவாகும் போது அவனைக் காணாமலே அவனுடனான உரையாடலும் சாத்தியமாகும்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முகுந்தனின் இந்த பத்துக் கதைகளில் மரநாய்கள் என்ற ஒரேயொரு கதை மட்டுமே வடக்கின் யுத்தச் சூழலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு கிராமத்தில் நடைப்பிணங்களாக்கப்பட்ட மக்களின் கொதிநிலையை சித்திரிக்கும் ஒரேயொரு கதை. அந்தக் காலகட்டத்தில் நம் அடுத்தடுத்த வீடுகளிலிருந்து ஏராளமான பொடியன்கள் காணாமல் போனார்கள். அந்த அனுபவம் நம்மில் பலருக்கும் சித்தித்திருக்கிறது. மீதமுள்ள ஒன்பது கதைகளில் இரட்டைக் கோபுரம் கதை மலேசியாவில் புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காகச் சென்ற தமிழ் சிங்கள இளைஞர்களைப் பற்றியது. இந்தக் கதையிலும் இன உணர்வுகளின் முரண்பாடு மனிதர்களை எத்துணை இழிசர்களாக்குகிறது என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறது.

கதையில் வரும் சுப்பிரமணியத்தையும் சுனிலையும் நம்மால் மறக்க முடியவில்லை. தொகுதியில் இன்னுமொரு கதையான சின்னமாமா கதை ஒட்டு மொத்தக் கதைகளினின்றும் இனமுரண்பாடுஇ போர்ச்சூழலோடு முற்றாக விலகி நிற்கும் ஒரு அழகான கதை. முகுந்தன் சொல்கிற சின்னமாமா திருநாவுக்கரசோடு எனக்கும் நீண்ட கால உறவு தொட்டந்தொட்டமாக இருந்து வந்தது. வாகரைஇ அட்டாளைச்சேனைஇ பின்னர் சென்னைஇ கோயம்புத்தூர்இ கடைசியாக அமைச்சர் அஷ்ரபின் மங்களா வாசல் என்று சின்ன மாமா தெரிந்தவரான படியால் கதை சுவாரசியமாகப்பட்டது. இந்தத் தொகுதிக்குள் அந்தக் கதை இடம்பிடித்திருக்க வேண்டாமோ என்று எனது அடிமனம் குறுக்கிட்டாலும்இ ஒரு பச்சையான உண்மை எவ்வாறு உன்னத இலக்கியமாகிறது என்பதற்கு சின்னமாமா சிறந்ததொரு எடுத்துக்காட்டு. இரங்கல் கூட்டத்தினூடே அந்தக் கதையை அவர் நகர்த்திச் செல்லும் நேர்த்தியும் நுட்பமும் இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரிடமும் காணக்கிடைக்காத சங்கதி.

ஏனைய ஏழு கதைகளும் பின்னுரையில் கவிஞர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் சொல்வதைப் போல - இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்திற்கு வெளியேஇ யுத்தம் காரணமாக இன உறவுப் பிளவுண்ட தலைநகர் கொழும்பில்இ சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றன - என்கிறார்.

அந்த ஏழு கதைகளும் நமக்குச் சொல்ல வருவது வாழ்வுப் பிரச்சினை மட்டுந்தானா? இல்லை. உயிர்வாழ்தலுக்கான வேண்டுதல்கள்இ உறவினர்களோடு தொலைபேசியில் தமிழில் உரையாடுவது கூட குற்றமாகக் காணப்பட்ட தருணங்கள்இ யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிக்க கொட்டாஞ்சேனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட இராப்பொழுதுகள்இ சுதந்திர நாளில் கூட சுதந்திரமாக நடமாட முடியாத அவலம்இ ஒரு பொய்யான தகவலின் மூலமே எத்தனையோ இளைஞர்களின் உயிர்கள் காணாமல் போன நாட்கள் அவை.

கதைகளைப் படிக்கும் தோறும் அந்த அனுபவங்களெல்லாம் அப்படியே நம் மனத்தில் வந்து கவிழ்ந்து போகின்றன. அப்படியான கதைகளில் 'சிவா' கதையில் வரும் சிவாஇ கல்வியையும் பறி கொடுத்து காதலையும் இழந்து கடைசியில் காணாமல் போனவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியலில் தனது பெயரையும் விட்டுச் செல்கிறான்.

தொகுதியிலுள்ள பத்துக் கதைகளினதும் சுருக்கத்தை விரிவஞ்சித் தவிர்த்துக் கொள்கிறேன். ஒரு யாழ்ப்பாணத்து (20-40 வயது) இளைஞனின் ஒரு குறிப்பிட்ட கால கட்ட வாழ்வுப் பாதையின் அவலங்கள் அல்லது அனுபவங்கள் இங்கு சிறுகதைகள் என்ற பெயரில் கோட்டோவியங்களாக்கப்பட்டுள்ளன. சின்னச்சின்ன வார்த்தைகளில் அவை அடுக்கப்பட்டிருக்கும் அழகு அபூர்வமானது. தனது படைப்பின் பூரணத்துவத்தின் வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்கும் வல்லமையை தேவமுகுந்தனின் படைப்புமொழியே அவருக்கு இலகுவாக்கி இசைவாக்கியுமிருக்கிறது.

தனக்கு உண்மையாக வாழும் மனிதர்களால்தான் உண்மையினூடாக கண்ணீரினூடே தெரியும் அந்த வீதிகளில் நடமாடும் சக மனிதர்கள் மீதும் அன்பையும் அக்கறையையும் கொள்ள முடியும். இங்கே தேவமுகுந்தனால் மார்தட்டலோஇ பிரகடனங்களோஇ பாசாங்கின் துர்வாடையோ இல்லாமல் இந்தக் கதைகளை மிக இயல்பாக அவரால் சொல்ல முடிந்ததென்றால் அவருக்குள் வாழும் அந்தக் கனவு மனிதனையே நாம் போற்றுகிறோம். இந்தப் பத்துக் கதைகளிலும் ஒரு பொய்யான வார்த்தையைக் கூட என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.
பேச்சு வழக்கில் வெளிப்போகும் ஒலியில் இயல்பாகவே இசைந்து வரும் துயரத்தின் மாயத்தை எழுத்தில் கொண்டு வரும் முயற்சியில் தேவமுகுந்தன் எடுத்துக் கொள்ளும் பிரயாசை எனக்கு அவரில் மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. பத்துக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு கடந்த இருபதாண்டுகளில் நமது ஈழத்து நவீன சிறுகதை இலக்கியம் கதைக்கான தேடலிலும் கதை சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக் கையாளும் முறைமையிலும் ஏற்பட்டிருக்கும் நல்ல தருணங்களை நமக்கு இனங்காட்டிச் செல்கிறது.இத்தகைய ஆளுமைகளின் சொந்தக்காரர்களாக எமது இளைய தலைமுறையினரில் ஒரு ஐவரை என்னால் இனங்காட்ட முடியும். அவர்களில் தேவமுகுந்தனும் முக்கியமானவர் என்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

அன்பான வாசகனே! கண்ணீரினூடே தெரியும் வீதியில் நீயும் இறங்கி கரைசேரப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி: வீரகேசரி 23.12.2012 -

கே.எஸ்.சிவகுமாரன்

தேவமுகுந்தனின் ‘கண்ணீரூடே தெரியும் வீதி’: புதுத்தளங்களை அறிமுகப்படுத்தும் சமூகப் பார்வை கொண்ட கதைகள்


‘நிர்மலன்’ என்ற புனைபெயரிலும் 1990கள் முதல் எழுதிவரும் புதிய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளரும் கணிதத்துறை விரிவுரையாளருமான “தேவமுகுந்த”னின் (தேவராசா முகுந்தனின்) சிறுகதைத் தொகுப்பான ‘கண்ணீரூடே தெரியும் வீதி” யை முதற் தடவையாகச் சில நாட்களுக்கு முன் படித்துப்பார்த்தேன்.

இத்தொகுப்பிலே 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் என் மனத்திரையில் ஓடிய எண்ணத்துளிகளை இங்கு பதிவு செய்ய முயல்கிறேன்.

இவருடைய கதைகளூடாகத் தெரியவரும் பண்புகள் எவை என்பவற்றைப் பொதுப்படையாகக் பார்ப்பற்கு இந்தப் பத்துகதைகள் ஒவ்வொன்று பற்றியும் சில குறிப்புகளைத் தரவேண்டியுள்ளது. முதலாவது கதையில் இவர் கூறவருவது என்ன வென்றால், பாதிக்கப்பட்டவர்கள் எவராயிருந்தாலும், அவரவர் உயிர்கள், சம்பந்தப் பட்டவர்களின் தனிப்பட்ட உறவுகள் காரணமாக, பெறுமதியானவை.

இதற்கு உதாரணமாக கதையின் ஆரம்பத்திலேயே கதைசொல்பவர், குடியிருக்கும் அறையின் சொந்தக்காரரின் தழுதழுத்த குரலில், இரண்டு இராணுவ இளைஞர்கள் யுத்தத்தில் மாண்டுபோனதை பாராபட்சமற்ற விதத்தில் நாமும்’ பச்சாதாபம் கொள்ளும் வகையில் தமது கருத்தோட்டத்தைக் கூறாமற் கூறுகிறார்.

மறு கோடியில் கதை சொல்பவரின் நண்பன் நகுலன் (போராளியாக இருக்கலாம்) (தனது தந்தையின் துயரத்துக்கும் உட்பட்டவன்) கோப்பாயில் இறந்துவிட்ட செய்தியும் கிடைக்கிறது.

“நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிலோடை வீட்டுக்குப் போகின்ற செத்த வீடுகளுக்குப்போக வேண்டும்” என்று கதை சொல்பவர் எழுதுகிறார். “கண்ணீரினூடே வீதி தெரிகின்றது” என்ற வாசகமும் இடம்பெறுகிறது. கதைசொல்லும் பாத்திரத்துக்குத் தர்ம சங்கடமான நிலைமை, ஆயினும் இரண்டு வகையில் இடம்பெற்ற மரணங்கள் வாசகர்களாகிய நமக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

இக்கதை நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டாலும், கதை சொல்லும் பாங்கு நவீனத்துவ ரீதியில் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இருந்த போதிலும், கதையுடன் நெருங்கிய சம்பந்தமில்லாமல் கதையின் பெரும்பகுதியில் சில சம்பவங்கள் சுவாரஸ்மான முறையில் எழுதப்பட்டிருந்ததும் கூட இடம் பெற்றிருப்பது ஒரு நல்ல “சிறுகதை”யில் இடம்பெறுவதை ஆசிரியர்கள் தவிர்க்கவேண்டும்

வழிகாட்டிகள்

நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையும் கவனத்திற்குரியது. கதையின் ஆரம்ப வசனங்களைக் கருத்தூன்றி கதாசிரியர் எழுதுவது மெச்சத்தக்கது.

இக்கதையிலே அடுத்து கதாபாத்திரம் தனது தொழில் நடைமுறைகளின் இடர்ப்பாடுகளை விவரணையாக நீணடதொரு ஒற்றைப் பந்தியில் விபரிக்கிறார்.

அடுத்து எல்லாத்துறைகளில் மாப்போல, கல்வித் துறையிலும் தமிழினம் எதிர்நோக்கும் பல தடைகளும், உதாசீனங்களும் வாசகர் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.

அரச அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியா வாசகர்கள் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். “மனதில் சிரிப்பு வந்தது” என்ற வாக்கியம் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது.

யதார்த்தச் செய்திகளை நீட்டிச் சொல்வது கதையின் பின்னணியை அறிய ஒரு வகையில் உதவக் கூடுமாயினும், அவ் விவரணையூடே கதாசிரியர் இடையில் புகுந்து வியாக்கியானங்கள் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

நல்லவேளையாக கதாசிரியர் இதனை அளவு மீறிச் செய்யவில்லை என்பது திருப்தியளிக்கிறது. “கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்துப்பிழை வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை மொழிகளுக்குச் சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டடான்” என்ற பகுதியில் இருந்து கதாசிரியருக்கு இதமான நகைச் சுவை உணர்வு இருப்பதைநாம் புரிந்து கொள்கிறோம்.

மகாநாட்டிலே பின்னர் என்ன நடந்தன என்பதை கதாசிரியர் தரும்போது பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். செய்திகளை செய்திவடிவில் கொடுக்கலாம். ஆனால் கதையில் வரும் பொழுது அச்செய்திகள் கதையின் செயல்களுக்கு சம்பவங்களை நேரடியாகவும், திருப்பங்களுக்கு ஏதோ வகையில் உதவும் விதத்திலும் இருத்தல் வேண்டும்.

முகுந்தனின் என்னல்களில் மற்றொரு ஆக்க ரீதியான ஒப்புவமை பிரயோகம்.

“ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, நல்ல தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக்காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரிபோன்று, வாமதேவன் இந்திரனின் மனதில் தோன்றினார்” என்று எழுதியிருப்பது சுவைக்கத்தக்கது.

நகைச்சுவையும், அங்கதமும் கொண்ட எழுத்து நடையை தேவமுகுந்தன் கொண்டிருப்பது எனக்கு உமாவரதராஜனின் எழுத்து நடையை நினைவுப்படுத்துகிறது. இந்தக் கதைமூலம் கணணித் துறையில் பயன்படுத்தப்படும் பல தமிழ் கலைச் சொற்களை நான் அறிந்து கொண்டேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவம் சில எல்லைக்கட்டுக்களைக் கொண்டிருப்பதனாலோ என்னவோ இப்பொழுது “புனைகதை சார ஆக்க இலக்கியம்’ பிரபல்யம் பெற்று வருகிறது. அதாவது கதைபோன்ற கட்டுரைக்கோவை என இந்த எழுத்து முறையைக் கூறலாம்.

லெ. முருகபூபதி தேவமுகுந்தன், அஷ்ரப் சிகாப்தீன், இளைய அப்துல்லா, அல் - அஸ்மத் போன்றோர் அத்தகைய எழுத்து வடிவத்தைக் கையாள்கின்றனர் என நினைக்கிறேன்.

இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள்போல ஆய்வைப் பாராட்டியே பேசுகின்ற” என்ற வாக்கியமும் என்னைக் கவர்ந்தது. கல்வித்துறையிலும் சமூக ஊழல்களை வெளிப்படுத்துகிறது இந்தப் படைப்பு இக்கதை ‘தகவம்’ பரிசு பெற்றதையும் இங்கு குறிப்பிடலாம்.

இடைவெளி

இது ஓர் அற்புதமான கதை. எழுதப்பட்ட முறையும் நன்று. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அலுவலகங்களில் சிங்களம் மாத்திரம் தெரிந்த ஊழியர்களும் தமிழர்களை தம்மோடு ஒத்தவர்களாய் மதிப்பதில்லை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்ள மொழியில் சில உரையாடல்கள் தந்திருப்பதும் அதன் சாராம்சத்தைத் தமிழில் தந்து தனது விமர்சனக் குறிப்பை ஜெகன் என்ற பாத்திரம் வாயிலாக தேவ முகுந்தன் தருகிறார்

இரட்டைக் கோபுரம்

தேவமுகுந்தன் தமிழ் வாசகர்களுக்குப் புதுப்புது உலகங்களைக் காட்டுகிறார். கொழும்பு, கோலாலம்பூர்-யாழ்ப்பாணம் என்று பலவிதக் கோலங்களைக் காட்டுவதுடன் தமிழ்-சிங்கள பாத்திர சிருஷ்டிiயும் புதுமை தருவது.

இது சுவாரஸ்யமான கதை. கதைக்குப் புறம்பான செய்திகள் இல்லை. சொல்ல வந்த செய்தியை நோக்கி கதை நகர்கிறது. ஈற்றில் கதையில் வரும் 'பற தெமிளு' என்ற பதம் கதையின் அடிநாதமாக இருப்பதற்காகவே கதையின் மன்னை நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன.

ஆழ்மனதில் குடிபுகுந்து இருக்கும் இனத்தவேஷம் வெளிப்படவதை நயமாக ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார். இம்மாதிரியான உத்திகளே கதையாக அமைகின்றன.

சின்ன மாமா

தேவமகுந்தன் அண்மைக் காலமாக அதிகம் வாசிக்கின்றார் என்பதனையும் உடன் நிகழ்கால எழுத்துக்கள் அவருக்குப் பரிச்சயமாய் உள்ளது என்பதும் அவர் அண்மைக் காலங்களில் எழதும் கதைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கதையும் உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்பு போல அமைந்திருக்கின்றது. ஆற்றல் மிகுந்தவர்கள் கூட வேஷதாரிகளாகவும் போலிகளாகவும் இருக்கக் கூடும் என்பதைக் கதை மூலம ;நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இவன்

பொதுவாகவே பெரும்பாலான தமிழர்களும் மலையாளிகளும் சுயநலம் கொண்டவர்கள் என்பது பொதுவான ஒரு அபிப்பிராயம். இதற்கு பூகோள ரீதியான காரணங்களும் இருக்கக் கூடும். இந்தக் கதையிலே கதாசிரியர் இந்த விபரிப்பு மூலம் இந்த அவதானிப்பை நிலைநாட்டுகின்றார். மற்றவர்கள் காத்திருக்க தங்களுக்குள்ளேயே பத்திரிகைகளை மாற்றிமாற்றிப் படிக்கும் பழசுகளை நினைக்க இவனுக்கு சினமாயிருந்தது. பார்த்தால் பெரிய மனிதர் போலிருக்கும் இவர்களின் சிறுமைத்தனத்தை எண்ண வெறுப்பாயிருந்தது. இவர்களுடன் வாதிட்டுக் கதைக்க முடியாது.

இந்தக் கதைதில் வரும் பாத்திரம் சுயசரிதைப் பாங்கில் தனது நாளாந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவது நமது அன்றாட வாழ்வு நிலைமைகளில் சிலவற்றை யதார்த்த பூர்வமான சித்தரிப்பாக அமைகின்றது. இன்னொரு அத்தாட்சி வெலை கிடைப்பதற்கு கல்வித் தகுதி மட்டும் போதாது செல்வாக்கும் பணமும் தேவையென்ற உண்மை இவனுக்கு நான்கைந்து நேர்மகத் தேர்வுகளுக்குப் போய்வந்த பின்ன்ர புரிந்தது.

ஏமாற்றங்களும் விரக்திகளுந்தான் ஒருவனை வன்முறையாளனாக மாற்றுகின்றனவோ?

'இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள். '

இதுவும் ஒரு யாதார்த்த உண்மை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் படித்து தகுதிக்கேற்ற வேலைகிடைக்காத சராசரி யுவன் மீது பச்சாத்தாபம் தான் ஏற்படுகின்றது.

இவன் நல்லாய்ப் படித்த பெடியனாம் இப்ப இலேசாய்த் தட்டிப் போட்டுது போல..நெடுகலும் சங்கத்துக்குள்ளேயே திரிகிறான். இடைக்கிடை தன்பாட்டில சிரிக்கிறான்... ' அவர்கள் கதைத்தது இவனுக்கு மெதுவாகக் கேட்டது.

என்று கதை முடிகின்றது.

கூட்டத்தில் ஒருவன்

கொழும்பில் மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக் கொலங்களை நிதர்சனமாக எழுதும் தமிழ் அல்லது முஸ்லிம் எழுத்தாளர்கள் இல்லை என்றெ சொல்லலாம். இந்தக் குறைபாட்டை நீக்குவது பொன்று தெவமகுந்தன் எழுதுவது எனக்கு உவப்பாக உள்ளது. இக்கதையில் அற்புதமாக அவர் சுட்டிக்காட்டும் பாசாங்குகள் நயமாய் அமைகின்றன. சி.சிவசேகரம், உமா வரதராஜன், அஷ்ரப் சிகாப்தின் போன்றொர் எழுதுவது போன்ற நையாண்டி நோக்கு தேவமுகுந்தனிடமும் இருப்பதை அவரது எழுத்துக்களில் காண்கிறோம்.

மரநாய்கள்

1993 இல் பிரசுரமான இந்தக்கதை சுட்டும் சம்பவங்கள் இந்திய அமைதி காக்கும் படையின் யாழ்ப்பாண அட்டகாசங்கள் தொடர்பானது. இது குறிப்பால் உணர்த்தும் ஒருவகை. ரஞசகுமாரின் 'கபரக்கொய்யா' போன்றது.

கதையின் முடிவுப்பகுதி:

'அண்ணாஇ கோழியைப் பிடித்துக் கொண்டு போட்டாங்கள்...'

வாழைகளுக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்த தமயன் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்:

'மரநாய்களைத் துரத்த வேண்டும்'

ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த மட்டில் இந்தத் தொகுதி ஒரு புதிய வரவேற்கத் தக்க ஆக்க இலக்கியம். தேவமகுந்தன் ஒர குறிப்பிடத் தக்க ஒரு சிறுகதையாசிரியர் என்பதாகும்.

நன்றி : தினகரன் ( 23.12.2012 , 7.1.2013)

.

Friday, December 21, 2012

எம் . கே . முருகானந்தன்


இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார். இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார். இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.

இந் நூலில் உள்ள இவரது படைப்புகள் 'கலைமுகம் (3), 'காலம்'(3), 'யுகமாயினி'(1), 'ஞானம்'(1), 'ஜீவநதி'(1), ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்திருக்கின்றன. மாணவப் பருவத்தில் இவர் எழுதிய சிறுகதையான மரநாய்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அந்நேரத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நூலின் முகப்புக் கதையும் நூலின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான 'கண்ணீரினூடே தெரியும் வீதி' தினக்குரல் ஞாயிறு பதிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகள் பொதுவாக தீவிர வாசகர்களைக் கவர்வதில்லை. அத்துடன் என்போன்ற சோம்பேறி வாசகர்கள் பார்வைக்கும் கிட்டுவதில்லை. காரணம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வாசிக்க ஆரம்பிப்பதற்கிடையில் பழைய பேப்பர்காரனது தள்ளுவண்டியில் பத்திரிகை ஏறியிருக்கும். ஆயினும் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் நல்ல பல கதைகள் வெளிவந்துள்ளன.

நல்ல படைப்பாளி

இவர் ஒரு நல்ல படைப்பாளி. குறுகிய காலத்திற்குள் இவரால் எவ்வாறு இவ்வளவு நன்றாகக் கதை எழுத முடிந்திருக்கிறது என யோசித்தால், இவரிடமுள்ள தார்மீகக் கோபமும் ரசனையுர்வும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதற்குக் காரணங்கள் பல இருக்கும். பரந்த வாசிப்பு, தேடல், தனது படைப்பில் எளிதில் திருப்தியடையாமல் சீர்திருத்தல் போன்ற பல.

ஆனால் இவற்றிக்கு மேலே வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது. அதை முகுந்தன் தனது முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். "முதல் வாசகனாக இருந்து வாசித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்" திரு.அ.யேசுராசா என்கிறார்.

யேசுராசா இலை இதழின் ஆசிரியாராக இருந்தவர். ஈழத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலரது மிகச் சிறந்த கதைகள் அலையில் வெளி வந்திருக்கின்றன. முதல் வாசகனாகவும் ஆலோசகராகவும் நண்பர் யேசுராசா இருந்ததால்தான் அவ்வாறான சிறுகதைகள் வெளிவந்தன என்பது நினைவிற்கு வருகிறது.

சிறுகதையை புனைகதை என்பார்கள். ஆனால் இவை வெற்றுப் புனைவுகளாக இருப்பது சாத்தியம் அல்ல. பெரும்பாலும் யதார்த்தமானவை. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள். படைப்பாளியின் மனத்தில் ஆழ்மனத்தில் பதிந்தவையாக இருக்கும்.

தார்மீகக் கோபம்

ஒரு உதாரணம் சொல்லலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருந்தரங்கு நடைபெற இருந்தது.; உணவு முறைகள் பற்றியது. நோய்களுக்குக் காரணமான உணவு முறைகள், மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, எவ்வாறு சில வகை உணவுகள் உதவ முடியும் என்பது பற்றியது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். நோய்களைத் தணிக்க மருந்துகளுக்கு அப்பால் உணவு முறை உட்பட்ட வாழ்க்கை முறைகள் உதவும் என நம்பும் எந்த மருத்துவனுக்கும் பிடித்தமான விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது ஒரு வேலை நாள். கருத்தரங்கிற்கு நான் சென்றால் தேடிவரும் நோயாளிகள் ஏமாற நேரிடும். ஆனாலும் அங்கு நான் பெறும் அனுபவங்களை பத்திரிகைகளில் பகிர்வதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைவார்கள் என்பதால் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் நடாத்தப்படும் கருத்தரங்கு. ஆனால் அங்கு பெருந்தொகையான தாதியர்கள் மற்றும் உணவு லிகிதர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு முற்றுமுழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது. இடையிடையே புரஜெக்டரில் காட்டப்பட ஆங்கில சிலைட்டுகளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டியிருந்தது.

முகுந்தனும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது கற்கைச் செயற்பாட்டில் வழிகாட்டிகள் பற்றியது. அது பங்குபற்றுபவர்களுக்கு அரசு பணம் கொடுத்து செய்த கருத்தரங்கு ஆனால் நாங்கள் பணம் கொடுத்து அந்தக் கருத்தரங்கு சென்றிருந்தோம். இருந்தபோதும் நாம் எழுதவில்லை, உரத்துப் பேசவில்லை, மௌமாக இருந்தோம். ஆனால் தார்மீகக் கோபமுள்ள படைப்பாளியான முகுந்தனை அது ஆழமாகப் பாதித்திருந்தது. அவரால் மௌமாக இருக்க முடியவில்லை. அதுவே 'வழிகாட்டிகள்' என்ற சிறுகதையாகப் பரிணமித்தது.

நம்பகத்தன்மை

சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய படைப்பு. அது அளவில் சிறியது என்பது மட்டுமின்றி மனத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு சிறிய உணர்வை, அல்லது ஒரு சிக்கலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அது தனிப்பட்ட ஒரு மனிதர் பற்றியதாகவோ அல்லது ஒரு நிகழ்வு பற்றியதாகவே கூட இருக்க வாய்ப்புண்டு.

சிறுகதையில் இறுக்கமான கட்டுமானத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. முகுந்தனின் படைப்புகளில் இந்த இறுக்கத்தைக் காண்கிறோம். தனது படைப்பிற்கு அவசியமானதற்கு அப்பால் எதையும் அவர் எதையும் வளவளவென்று சொல்வதில்லை. தனது மனதை அருட்டுவதைப் பற்றி மட்டும் எழுதும் எந்த எழுத்தாளனும் அவ்வாறே எழுதுவான்.

ஆனால் இங்குள்ள பல படைப்பாளிகளும் வலிந்து கதை கட்டுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். கதைக்குத் தேவையானதா தேவையற்றதா எனச் சீர்தூக்கிப் பார்க்கமல் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அதில் சொல்லிவிட முனைகிறார்கள்.

பரபரப்பாகப் பேசப்படும் விடயங்கள் பற்றி ரெடிமேட் தாயாரிப்புகள் சுடச்சுட வெளிவரும். சாதீயம், இனப்பிரச்சனை, போர்,பெண்ணியம் என எதைப் பற்றியும் அது பற்றி எந்தப் பட்டறிவு இல்லாதவர்களும் எழுதிவிடுவார்கள்.

அதற்கும் அப்பால் உபாசகர்களாக, போதகர்களாக மாறி நீட்டி முழங்கிப் போதனைகள் செய்ய முனைகிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் சிறுகதைப் படைப்பாளிகளாக பத்திரிகைகளையும் மேடைகளையும் நிறைக்கிறார்கள்.

ஆனால் முகுந்தனின் படைப்புகளைப் படிக்கும்போது அவற்றில் நம்பகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. எதுவும் போலியாக இல்லை. மாணவனாக, வேலையற்ற பட்டதாரியாக, கொழும்பில் அறையில் வாடகைக்கு தங்கியிருக்கும் வாலிபனாக, அரச ஊழியனாக, வெளிநாட்டிற்கு புலமைக் கல்விக்காகச் செல்பவனாக, நூலகத்தில் ஈயோட்டும் வாலிபனாக, புகழ் பெற்ற எழுத்தாளனின் போலி முகத்தை வெளிப்படுத்தும் உறவினனாக அவரது பாத்திரங்கள் அனைத்தும் உயிரோவியமாக அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களோடு எங்களையும் நெருக்கமாக உலவ விட்டிருக்கிறார்.

முகுந்தன் படைப்புலகில் அதிகம் எழுதியது போர் முனைப்புப் பெற்ற காலமாகும். எனவே இவற்றில் போர் மற்றும் இன முரண்பாடு பற்றியதாகவே இருப்பதில் வியப்பில்லை. கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் குண்டு வீச்சு, செல் அடி என போர் பற்றிய நேரடியான அனுபவங்கள் பற்றிய கதைகள் கிடையாது. மரநாய்கள் விதிவிலக்கு.

யதார்த்தம்

இவரது படைப்புகள் பெரும்பாலும், மாற்று மொழிபேசும் நண்பர்களுடன், சகஊழியர்களோடு பழகும்போது ஏற்படும் அவமானங்களைப், இனப் பாகுபாடுகளை, உதாசீனங்களை, அவற்றால் ஏற்படும் மனப் பாதிப்புகளைப் பேசுகின்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மாற்று இனம் மீதான வன்மம் இவரது படைப்புகளில் இல்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

தாய் மொழி, தன் கலை கலாசாரம் பண்பாடு மீதான அதீத பற்றும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்பும் இளக்காரமும் இன முரண்பாட்டை வளர்க்கவே செய்யும். பல இனங்கள் சேர்ந்து வாழும், தொடர்ந்தும் வாழ வேண்டிய சூழலில் பேனா பிடித்தவர்கள் சற்று நிதானமாக பொறுப்புணர்வோடு எழுதுவது அவசியம். புண்ணை ஆறவிடாது நோண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அல்ல எழுத்தாளன். அதே நேரம் வாக்கு வங்கியை பிடித்து வைப்பதற்காக பிரச்சைனைகளை பூதகாரமாக்கும் அரசியல்வாதி போலவும் இருப்பது நல்லதல்ல.

முகுந்தன் மலினமான புகழுக்காக அதீத இனப் பற்றாளனாக தன்னைக் காட்ட முற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் 'இரட்டைக் கோபுரம்' கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனோடு ஒன்றாக வேலை செய்து, உண்டு குடித்து உலாவித் திரிந்த சிங்கள நண்பர்களில் ஒருவன் தனக்கு பாரிய துன்பம் ஏற்பட்ட வேளையில் 'பற தெமிளு' என்ற வார்த்தையை உதிர்த்துவிடுகிறான்.

இவனது மனம் நோகிறது. ஏமாற்றம் அடைகிறது. அருகே நின்ற சிங்கள மொழி தெரியாத மற்றொரு நண்பன் அவன் என்ன சொன்னான் என இவனை வினவுகிறான். 'எல்லாச் சிங்களச் சொற்களுக்கும் எனக்குக் கருத்துத் தெரியாது' என இவன் பதிலளிக்கிறான். நல்ல பதிலாக எனக்குத் தோன்றியது. முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் உறவுகளை பேண முயலும் ஒருவன் அவ்வாறுதான் பேச வேண்டும். முகுந்தன் தனது பாத்திரத்தை அவ்வாறு பேச வைத்தமை மகிழ்வளிக்கிறது.

இன முரண்பாட்டுக் கதைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, வன்னியில் வாழ்ந்தவர்களது பார்வை அதி தீவிரமாகவும், யாழில் வாழ்பவர்களது படைப்புகள் அதில் சற்று காரம் குறைந்து மறைபொருளாகவும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதீத கற்பனைவாதிகளாகவும் படைப்பார்கள். கொழும்பில் வாழ்பவர்களது பார்வை வாழும் சூழலுக்கு ஏற்ப சற்று நீர்த்தலாகவே இருக்கும்.

எவ்வாறாக இருந்தபோதும் இனமுரண்பாட்டை முன்நிலைப்படுத்தும் மற்றும் ஏனைய இனத்தவர்களை விரோதிகளாகச் சித்திரிக்கும் படைப்புகள், எமது தாழ்வுமனப்பாட்டின் வெளிப்பாடா என நான் சிந்திப்பதுண்டு.

அல்லது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைச் செய்திகளும் படைப்புகளும்தான் எங்களை மீளமுடியாத தாழ்வுச் சிக்கலில் ஆழ்த்துகின்றனவா என்பதையிட்டு சமூகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

முகுந்தனின் படைப்புகளில் இனப் பிரச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அதிதீவிர உணர்வு இருக்கவில்லை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக தொடர்ந்து இருக்காது யதார்த்தத்தை உணர்ந்த படைப்பாளியாக முகுந்தனை அவ்விடத்தில் கண்டேன்.

தொடர்ந்தும் இனமுரண்பாட்டுப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எமது வாழ்வின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் முகுந்தன் எழுதுவார் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சில கதைகள் உள்ளன. சின்ன மாமா, கூட்டத்தில் ஒருவன் போன்றைவை வேறு விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையும் சீ என ஒதுக்கக் கூடியவை அல்ல. எல்லாக் கதைகளும் நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளன. 10ல் அரைவாசிக்கு மேற்பட்டவை மிக நல்ல படைப்புகளாக உள்ளன. படித்து முடித்த பின்னரும் அவற்றில் பல கதைகள் எம்மோடு நெடுநேரம் உரையாடுகின்றன. அடுத்த படைப்புக்குள் புகவிடாது தொல்லைப்படுத்துகின்றன. இதனால் என்னால் இத்தொகுப்பை ஓரு மூச்சில் படித்து முடிக்க முடியாது போயிற்று.

இன்றைய விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. வழமையாக இவரது படைப்புகளை வாசிக்காத ஒருவர் கூட இன்றைய இவரது வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கண்டால் இக் கூட்டத்திற்கு வரவும், இவரது கதைகளை வாசிக்க விரும்பவும் கூடும். ஏனெனில்

இது ஒரு காலச்சுவடு வெளியீடு. இதற்கு பின்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள். இங்கு கருத்துரை வழங்க வந்திருப்பவர்கள் திரு.அ.யேசுராசா மற்றும் உமா வரதராஜன். இந்த மூன்று பேரும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் ஒரு விதத்தில்.... ஒருமைப்பாட்டைக் கொண்டவரகள். படைப்பிலக்கியத்தில் செழுமையை அவாவுபவர்கள். இலக்கியப் படைப்பின் தரத்தில் எந்தவித சமரசங்கங்களுக்கும் இடம் கொடாதவர்கள். முகத்திற்கான இது நல்ல படைப்பு என்ற அங்கீகாரத்தை எவருக்காகவும் கொடுக்க மறுப்பவர்கள். இவர்கள் அனைவரும் தாங்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வதன் மூலம் முகுந்தனின் படைப்புகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் படைப்பு இலக்கியம் பற்றி லியோ டால்ஸ்டாய் கூறிய ஒரு கருத்ததை நினைவில் கொள்ளலாம்.

".. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்' என்பது தானாக வந்துவிடும்..."

முகுந்தனின் முதல் இரண்டும் இருக்கின்றன.

அதாவது சொல்வதற்கு ஏதோ ஒரு விடயமும், அதில் நெகிழ்ச்சியான பற்றும் நிறையவே இருக்கின்றன. அத்துடன் நல்ல கதை சொல்லிக்கான டெக்னிக் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இதனால் இலக்கிய உலகில் அவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. மேலும் பல சிறப்புகள் அவரை வந்தடைய வாழ்த்துகிறேன். இத்தகைய அருமையான கூட்டத்தில் தலைமை தாங்க அழைத்தமைக்கு முகுந்தனுக்கு நன்றிகள்

நன்றி : Geotamil http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1187:2012-11-23-01-11-03&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


காலச்சுவடு பதிப்பகம் பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் திரு. தேவமுகுந்தன் அவர்களின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற தொகுதி 10 சிறுகதைகளை உள்ளடக்கி 102 பக்கங்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாய் கடமையாற்றி, தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் தேவமுகுந்தன் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களையே நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக எழுதியிருப்பதாக தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கியவர்களைத் தவிர, தலைநகர் உட்பட பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயநிலை அன்று காணப்பட்டது. அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இக்கதையினூடு அழகாக சித்தரித்து காட்டப்பட்டு இருக்கின்றது. அது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் பின்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

1980 களுக்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பெருள் இன முரண்பாடும் யுத்த அவலமும்தான். இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்தச் சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புக்கள் பேசுகின்றன என்கிறார்|.

கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்கால கட்டத்தில் எங்கும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை பறைசாற்றுகிறது. தமிழராயிருந்தாலென்ன, சிங்களவராயிருந்தாலென்ன யுத்தத்தில் தனது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் பயணிக்கும் பாதையாக கண்ணீர்ப் பாதையே எஞ்சிவிடுகிறது. தனது சகோதரனின் மரணம் நிகழ்திருக்கும்போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இந்தக் கதை நகர்கிறது.

வழிகாட்டிகள் என்ற சிறுகதை அதிகாரிகளின் அசமந்தப் போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றது. நிர்வாகம் ஒழுங்குசெய்யும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் பொடுபோக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றான். மதிய இடைவேளையின் போது குறிப்பிட்ட அதிகாரி இது சம்மந்தமாகக் கேட்க இன்னும் வேலையிருப்பதாய் கூறுகிறான் இந்திரன். அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது.

'அது அவசரமில்லை தம்பி ஆறதலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களை தந்தீரென்டா நான் அதை புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப் போடுவன்'.

இடைவெளி என்ற சிறுகதை இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அன்பின் இடைவெளி என்றும் கூறலாம். கொழும்பில் அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் தமிழ் உத்தியோகத்தரின் அவலநிலை இதில் உணர்த்தப்படுகின்றது. எதேச்சையாக அவர் விடுமுறை எடுக்கும் சந்தர்ப்பங்கள் அவரை இனவாதியாக மற்றவர்களை எண்ண வைக்கின்றன. காரணம் கொழும்பில் குண்டு வெடிப்பு நடக்கும் சம்பவங்கள் சொல்லி வைத்தாற்போல அவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் துரதிஷ்டமாய் நிகழ, அலுவலகத்தில் வேலை செய்யும் ஏனைய சிங்கள நண்பர்களின் பார்வையும், பேச்சும் அவருக்கெதிராக அமைவதை இக்கதை இயம்புகிறது.

சின்ன மாமா என்ற கதை ஏனைய கதையம்சங்களில் இருந்து மாறுபடுகிறது. சொந்த தகப்பனின், சகோதரியின், சகோதரனின் இறந்தவீட்டுக்கு கூட வராமல் தானும், தனது குடும்பமும், வேலையும் என்றாகிவிட்ட சின்ன மாமா பற்றியது. ஒரு எழுத்தாளராக வாழ்ந்து இறந்தபின் அவரது குணநலன்களைப் பாராட்டி அவருக்கு கௌரவ விழாவில் புகழ்ந்து கூறப்படும் விடயத்தை சொல்லி நிற்கிறது.

இவன் என்ற கதை படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் ஒரு இளைஞனின் அன்றாட வாழ்க்கை எப்படி கழிகிறது? அவனது மனது புண்படும் சந்தர்ப்பங்கள், அவனது திண்டாட்டம் போன்றவற்றை மிகச் சிறப்பாக கூறுகின்றது. மொத்தத்தில் இத்தொகுதி மனதில் நிலைத்துவிடுகிறது. தேவமுகுந்தனுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கண்ணீரினூடே தெரியும் வீதி (சிறுகதை) நூலாசிரியர் - தேவமுகுந்தன் வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம் விலை - இந்திய விலை 75 ரூபாய்

நன்றி : கீற்று (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22407:2012-12-19-11-31-59&catid=4:reviews&Itemid=267)

சி. விமலன்


'
தேவமுகுந்தனின் சிறுகதை தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளில் ஏழு சிறுகதைகளை அச்சுக்குப் போகும் முன்னரே அவர் மூலம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நான் ஆக்க இலக்கியத்தில் பெரிதாக ஈடுபட்டவன் அல்ல என்ற போதிலும் எனது தீவிர வாசிப்பில் நம்பிக்கை வைத்து எனது அபிப்பிராயத்தை அறிந்து கொள்வதில் அவர் பெரிதும் விரும்பி இருந்தார்.ஆக என்னளவில் நான் திருப்தி அடைந்ததாக கருதிய அவரின் சிறுகதைகளை இன்று மீள விமர்சிக்கும் நிலை ஒரு நெருக்கடியை தந்தாலும் அவ்வாறு தெரிவிக்கும் சில கருத்து நிலை முரண்பாடுகள் கால மாற்றத்தினால் ஏற்பட்ட ஒன்றென்பதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகின்றேன்.

ஈழத்து சிறுகதை இலக்கியத்தில் போர் குறித்து தோன்றிய கதைகளை இக்கட்டுரையின் வசதிக்காக மூன்றுவிதமாக வகைப்படுத்தி பார்க்கிறேன்.

1. போராட்டத்திற்கு ஆதரவான கதைகள் 2. இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை பேசும் கதைகள் 3. போர் சார்ந்த இருபிரிவினரையும் விமர்சிக்கும் கதைகள்

இதில் தேவ முகுந்தனின் சிறுகதைகளை இரண்டாவது வகையான இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை பேசும் கதைகளாகவே நான் பார்க்கிறேன் கொழும்பு,யாழ்ப்பாணம், மலேசியா ஆகியவற்றினை களமாக கொண்ட இவரின் கதைகளை பிறிதொரு கோணத்தில் நோக்க வேண்டுமென்றால்

1. சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்வியற் பிரச்சினைகள்

2. கல்வி உலகில் நிகழும் முறைகேடுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தல்

3. இலக்கியவாதிகளின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுதல்

4. வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வில் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டுதல்

எனவும் நோக்கலாம்.

புதிய தலைமுறையை சேர்ந்தவர்களில் அநேக எழுத்தாளர்கள் சம்பவங்களின் ஊடாக கதைகளை நகர்த்திச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறு சம்பவங்களுக்கு முக்கியத்தை கொடுக்கும் போது பின்னணி சூழலை மெருகூட்டுவதிலோ அல்லது நிலவியலை செதுக்குவதிலோ அதிகம் கவனஞ் செலுத்துவதில்லை.ஆனால் தேவ முகுந்தனது கதைகளில் கொழும்புச் சூழல் அதன் புவியியல் என்பன சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.ஜெயகாந்தன் ஒருமுறை மஞ்சக்குப்பத்தில் வாழ்ந்த ஆறு ஆண்டு காலத்தில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி அறுபது வருஷம் எழுதுவதற்கு என்னிடம் விடயம் இருக்குதென்று கூறியது போல தேவமுகுந்தனது இருபது வருட கொழும்பு வாழ்க்கை அவரின் சிறுகதைகளுக்கு கைகொடுத்துள்ளது.

தனது கதைகளை இறுதியில் அதிர்ச்சியினைக் கொடுக்கும் ஓ ஹென்றி பாணியில் எழுதாமல் தனது அன்றாட அனுபவத்தினை வடிவ நேர்த்தியுடனும் சிறந்த மொழியாற்றலுடனும் சித்திரித்து தனது இயலாமைகளால் ஏற்படும் ஆவேசத்தினை வாசகனுக்கு தொற்ற வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.

இவரின் சிறுகதைகளில் எள்ளல் கதைக்கேற்ற வகையில் சிறுபகுpதியாக இருக்குமே தவிர முழுக்கதையையுமே அவ்வாறான நடையை கொண்டு எழுதியவரல்ல.இத்தொகுப்பில் உள்ள 'வழிகாட்டிகள்','இவன்','சின்ன மாமா' சிறுகதைகளில் அது சிறப்பாகவே கையாளப்பட்டுள்ள தெனலாம்.இருப்பினும் எள்ளலோடு ஒரு விடயத்தை குறிப்பிட்டு விட்டு சில சிறுகதைகளில் 'எனக்குச் சிரிப்பு வந்தது' என்று குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாம்.

என்னளவில் இத்தொகுதியில் உள்ள சிறுகதைகளில் 'கண்ணீரினூடே தெரியும் வீதி', 'மரநாய்கள்', 'சின்னமாமா' ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாகச் சொல்வேன். இனத்துவ முரண்பாட்டினால் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையில் தோன்றிய வெறுப்புணர்வு பெரும்பாலான படைப்பாளிகளை தத்தம் தேசியவாத நோக்கில் இருந்து படைக்க முற்பட்டதனால் அவற்றின் சமநிலைத் தன்மை கேள்விக்குரிய தாக்கப்பட்டிருந்தது.தமிழ் படைப்பாளிகளால் பெரிதும் போற்றப்படுகின்ற சிங்கள எழுத்தாளரான தெனகம சிரிவர்த்தனவுடைய 'மித்துரோ' நாவலில் 'திருகோணமலையில் தமிழர்களால் சிங்களவர்கள் பாதிக்கப்படுவதைப் பிரதானமாகக் காட்டி நாட்டில் வேறு பகுதியில் சிங்களவர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவதை போகிற போக்கில் ஒரு செய்தியாக மட்டுமே சொல்லிப் போவதை' சுட்டிக்காட்டலாம்.

தேவ முகுந்தனின் சிறுகதைகளில் எனக்கு கடைசியாகப் படிக்கக் கிடைத்த கதை தான் 'கண்ணீரினூடே தெரியும் வீதி'. இதனைப் படிப்பதற்கு முன்னதாக ஷியாம் செல்வதுரையின் 'விந்தைப் பையன்' நாவலில் 1983 இனக்கலவரத்தின் போது அர்ஜி என்ற கதாபாத்திரத்தின் வீடும், அவனது பாட்டியும் உயிரோடு எரிக்கப்பட்ட போது அயல்வீட்டு சிங்களவரான பெரா மாமியும் அவரது கணவரும் அர்ஜி குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். அதேபோன்று அ.ரவி எழுதிய 'மகிந்தாவின் சாவு' சிறுகதையில் டென்சில் கொப்பேகடுவ கண்ணிவெடியில் சிக்கிய போதும் ஜனாதிபதி பிறேமதாஸ குண்டுவெடிப்பில் இறந்த போதும் வீட்டுக்கார சிங்களவரான மகிந்தா காடையர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றார். அப்போதெல்லாம் இது போன்ற சிங்கள மனிதர்கள் தேவமுகுந்தனின் கண்களில் படவில்லையா என்றதொரு கேள்வி என்னுள் எழுந்தது.

ஏனென்றால் இத்தொகுதியில் உள்ள 'இடைவெளி', 'சிவா', 'இரட்டைக்கோபுரம்' போன்ற சிறுகதைகளில் வருகின்ற சிங்களவர்களை ஒற்றைப்படையானதாகவே இவர் சித்திரித்திருந்தார்.

ஆனாலும் அந்தக்குறையை 'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையின் ஊடாக தேவ முகுந்தன் நிவர்த்தி செய்துள்ளார்.இது குறித்து பின்னுரையில் 'இனமுரண்பாட்டு காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக் கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது என பேராசிரியர் எம்.ஏ.நு மான் அவர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

அதேசமயம் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையின் சில பகுதிகளைப் படித்ததும் எனக்கு தாட்சாயணியின் ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதை நினைவுக்கு வந்தது.இரண்டு கதையிலும் போராளி ஒருவர் இறந்தபொழுதும் அந்தச் சடலத்தை வீடடிவ் வைத்து செத்தவீடு கொண்டாட முடியாத துயர நிலை சித்திரிக்கப்படுகிறது. தாட்சாயணி அதனை இவ்வாறு சித்திரிக்கின்றார்.

'இஞ்சை இவ்வளவு பேர் சொந்தமெண்டு இருக்க அவள் ஆஸ்பத்திரியில அநாதைப் பிணமாக .......அம்மம்மா முகம் கோணியபடி மூலைக்குள் உட்கார்ந்து விட்டாள்' எனச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தேவ முகுந்தனின் கதையில்

'நகுலனின் உடல் அநாதையாய் ஆஸ்பத்திரி சவச்சாலையில் இப்ப கிடக்கும் .....உடலில்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்' எனச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தாட்சாயணியின் சிறுகதையில் தங்கையான போராளி இறந்த தகவல் பத்திரிகை மூலம் தெரிய வருகிறது. தேவ முகுந்தனின் கதையில் தம்பியான போராளி இறந்த தகவல் தொலைபேசி மூலம் தெரியவருவதும் குறிப்பிடத்தக்கது.

மரநாய்கள் சிறுகதையை பொறுத்த வரையில் ஈழத்துச் சிறுகதைகளில் ஒப்பீட்டளவில இந்திய இராணுவத்தினர் குறித்த பதிவுகள் வெளிவந்தது குறைவு எனலாம்.பதிவு என்ற வகையில் எஸ் .எம்.கோபாலரத்தினம் எழுதிய 'ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை' நூலையும், நாவல் என்று பார்க்கையில் சயந்தனின் 'ஆறாவடு' அதனை ஓரளவு சிறப்பாக நிறைவேற்றி இருந்தது எனலாம்.சிறுகதைகளில் தணிகாசலம் எழுதிய 'சுதந்திரம்' சந்திரா தனபாலசிங்கம் எழுதிய 'இயன்றால் நகுக' சிறுகதைகளையும் சுட்டிக்காட்டலாம். 'மரநாய்' சிறுகதையில்

'தோட்டத்தின் பின்புற மிருந்து இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர்.தலைப்பாகை அணிந்திருந்த ஒருவன் இவனது தோளில் கையை வைத்து தம்பி என்று விட்டுச் சென்றான்' என்ற சித்திரிப்பே அவர்கள் எந்த இராணுவத்தினர் என்பதை இலகுவாக உணர்த்தி விடுகிறது. அத்தோடு இந்திய இராணுவத்தினர் பற்றிய பதிவுகளை ஏனைய மாவட்டங்களை விட அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர்களாலேயே சிறப்பாக எழுத முடியும்.

சின்ன மாமா சிறுகதை எழுத்தாளர் ஒருவர் மீது ஏற்பட்ட கடுஞ்சீற்றத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தனிப்பட்ட வக்கிரத்தை பிரதி பலிக்காமல் அறம் சார்ந்த நிலைப்பாட்டுணர்வுடன் எழுதப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.சாதியம் பற்றி தேவ முகுந்தன் எழுதிய கதையாகவும் இதனை கருதிக் கொள்ளலாம்.இன்று யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தில் பிறந்து வேறு இடத்தை வசிப்பிடமாக கொண்ட எழுத்தாளர்களும் ஒரு சிறுகதை தொகுதியை வெளியிட்டால் கட்டாயம் அதில் ஒரு சிறுகதையாவது சாதியம் பற்றியதாக இருக்கும்.சாதியத்தை மட்டும் வெளிப்படுத்துகின்ற தொகுதியை வெளியிட்ட எழுத்தாளர்களும் இருக்கின்றனர்.யாழ்ப்பாணம் இன்னமும் முற்றுமுழுதாக சாதியின் கரங்களில் இருந்து விடுபடாத நிலையில் அத்தகைய கதைகளின் வருகையையும் குறை சொல்ல முடியவில்லை. அந்த வகையில் வாழ்க்கையின் முதல் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்த தேவ முகுந்தனது சிறுகதைகளில்

1. தன் மகன் வேறு சாதிக்குள் திருமணம் புரிவதை அவர் வெறுத்தார். 2. அத்தைக்குத் தாங்கள் உயர்ந்த சாதியென்ற நினைப்பு இருப்பதாகவும் அவர் தான் சின்னமாமாவை ஊர்ப்பக்கம் விடுவதில்லை எனவும் அதனாற் தான் சின்னமாமா அக்காலங்களில் சாதி ஒழிப்புச் சம்பந்தமாக நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் பத்திரிகைகளில் எழுதிக் குவித்தார் போலும்

என்ற இரண்டு குறிப்புக்களை தவிர சாதி பற்றி வேறு எந்தவிதமான சித்திரிப்பும் இல்லை.அந்தவகையில் கூட இச்சிறுகதைத்தொகுதி ஏனைய சிறுகதை தொகுதிகளில் இருந்து வேறுபடுகிறது எனலாம்.

இத்தொகுதியின் சிறப்புக்கள் குறித்த ஒரு பார்வையை இதுவரை பார்த்தோம்.இருப்பினும் 'வழிகாட்டிகள்' என்ற சிறுகதையில் விமர்சகர்கள் குறித்து தேவ முகுந்தன் குறிப்பிடுவதை பாருங்கள். 'இலக்கிய விமர்சன கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல' என்று வரும் வரிகளுக்கு விதிவிலக்காகவேனும் ஓரிரு குறைபாடுகளை சொல்லலாம் என எண்ணுகின்றேன்.

இத்தொகுதியில் உள்ள கூட்டத்தில் ஒருவன் கதை 'ஞானம்' இதழில் வெளிவந்தபோது அந்தக்கதையின் தொடக்கம்

'மேல்வானம் சிவந்திருந்தது. கதிரவன் கடலினுள் துயில் கொள்ளச் சென்று கொண்டிருந்தான். கதிரவனும் களைத்து விட்டானோ? உழைத்து களைத்த மக்களை சுமந்த வண்ணம் பம்பலப்பிட்டி பக்கமிருந்து வந்த ரயில்கள் வெள்ளவத்தை ஸ்ரேசனில் சிறிது ஓய்வெடுத்து பின் தெகிவளை பக்கமாய் விரைந்தன.தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் இலேசாய் தெரியவாரம்பித்தன'என ஆரம்பித்திருந்தது. ஆனால் இச்சிறுகதை தொகுப்பில் அமைந்துள்ள மேற்படி 'கூட்டத்தில் ஒருவன்' சிறுகதையில் எவ்விதத்திலும் அவசிமற்ற இம்முதல்பந்தி இடம்பெறாமலே கதை தொடங்குகின்றது.இது தேவ முகுந்தன் தன்னை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தியதற்கு கிடைத்த வெற்றியே எனலாம். ஆனாலும் அதேபோன்று 'இரட்டைக் கோபுரம்' சிறுகதையின் ஆரம்பத்திலும் 'நெடுஞ்சாலையின் இருபுறத்தேயும் தெரிந்த செம்பனைத் தோட்டங்களில் பனிப்புகார் விலகியிருக்கவில்லை. தூரத்தே மலைமுகட்டுக்கு மேலால் கூரியன் மெதுவாக எட்டிப்பார்த்தான்'

என்று வருகின்ற வர்ணனைகளையும் நீக்கியிருந்தால் சிறுகதை இன்னும் கட்டிறுக்கமாக அமைந்திருக்கும்.

இவ்விடத்தில் ஒருமுறை நீலபத்மநாதன்; 'சிறுகதைகளில் வார்த்தை தெரிவு என்பது சீட்டுக்கட்டுக்களால் கட்டப்படும் கோபுரத்தில் ஒருசீட்டை எடுத்தால் எவ்வாறு ஒட்டுமொத்தமும் வீழ்ந்து விடுகிறதோ அதுபோல ஒரு வார்த்தையை நீக்கினாலும் முழுச்சிறுகதையின் கட்டமைப்பும் குலைந்து விட வேண்டும்' என்று கூறியது நினைவிற்கு வருகின்றது.

புதுமைப்பித்தன் எழுதிய நீண்டகதையான 'துன்பக்கேணி' சிறுகதை செம்பதிப்பாக வெளிவந்த போது 26 பக்கங்களில் அமைந்திருந்ததை நாம் தெரிந்திருந்தாலும் தேவ முகுந்தனின் 'இவன்' என்ற சிறுகதை வேலையற்ற பட்டதாரி ஒருவனின் மன அவசத்தை சிறப்புற வெளிப்படுத்தி இருந்தது. இருப்பினும் இதில் வரும் அளவுக்கதிகமான சம்பவங்கள் கதையை நீர்த்துப் போகச் செய்வதாகவே எனக்குப் படுகின்றது.இக்கதையில் வரும் ஓரிரு சம்பவங்களை நீக்கினாலும் கதையின் மையக்கருத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது என்றே நம்புகின்றேன். 'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையில்

1. '1995 ஐப்பசி வரையும் எனது குடும்பத்தின் முகவரி யாழ்ப்பாணமாய் தான் இருந்தது.1996 வரை சாவகச்சேரி ஆயிற்று.பின் அது உருத்திரபுரம், மல்லாவி என்று கிளிநொச்சிக்குள் நகர்கின்றது' என்ற சித்திரிப்பிலும் 2. 'அனுப்புபவரின் முகவரியில் அம்மாவின் பெயர் எழுதப்பட்டு 455, மல்லாவி, கிளிநொச்சி என்றிருந்ததால் ஸ்ரேசன் றோட் வீட்டை விட்டு எழும்ப வேண்டியதாயிற்று' என்ற சித்திரிப்பிலும்

முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வருகின்ற மல்லாவியை கவனக்குறைவால் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இரண்டு தடவைகள் தவறாக உள்ளடக்கி விட்டார். பேராசிரியர் எம்.ஏ.நு மான் எழுதிய பின்னுரையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு வசனங்களே புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பாக அமைந்துள்ள போதிலும் 'குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும் புதிய தலைமுறையை சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது' என்ற முதல் வசனமும் 'புதிய தலைமுறையை சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார் என்பதில் ஐயமில்லை' என்ற கடைசி வசனமும் கூறியது கூறலாகவே காணப்படுவதனால் கடைசி வசனத்தை நீக்கி இருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

எனவே இனிவரும் படைப்புகளில் தேவ முகுந்தன் புதிய களங்களையும் மரபு நிலைப்பட்ட எடுத்துரைப்பு முறையில் இருந்து சற்று விலகி புதிய உத்தி முறைகளை கையாண்டு படைப்புகளை படைக்கும் பொழுது அது தேவ முகுந்தனின் கதைகளை பிறிதொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.

உமா வரதராஜன்


தேவ முகுந்தன் என்ற பெயருடன் பரிச்சயம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நான் படித்த அவருடைய முதல் கதை 'சின்ன மாமா'. ஒரு சின்ன இடைவெளியின் பின்னர் நான் வாசித்த அவருடைய அடுத்த கதை 'கூட்டத்தில் ஒருவன்'.தேவ முகுந்தன் என்ற பெயருடன் பரிச்சயம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நான் படித்த அவருடைய முதல் கதை 'சின்ன மாமா'. ஒரு சின்ன இடைவெளியின் பின்னர் நான் வாசித்த அவருடைய அடுத்த கதை 'கூட்டத்தில் ஒருவன்'.

அவருடைய முழுக் கதைகளையும் ஒரு தொகுப்பு வடிவத்தில் படிக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கின்றது.

அவருடைய படைப்புலகத்தோடு என்னை நெருங்க வைக்கின்ற பல அம்சங்களை முதலில் இங்கே சொல்ல வேண்டும். முக்கியமாக அவருடைய படைப்புலகம் ஒரு திக்குத் தெரியாத காடல்ல.. நம் எல்லோருக்கும் பரிச்சயமான வழித் தடங்களே அங்கு உள்ளன. தோசையை சதுரமாகச் சுட்டு வடிவத்தை மீறிய வடிவம் இது என்றெல்லாம் அவருடைய எழுத்துகள் வித்தை காட்டுவதில்லை. வினா விடைகள், கடிதங்கள், பத்திரிக்கை செய்திகள், துணுக்குகள்.. இவற்றை எல்லாம் தன்னில் அடுக்கிக் கொண்டு இலக்கிய அடையாள அணி வகுப்பில் அது கலந்து கொள்வதுமில்லை . அல்லது கூலிப் படையின் ஆயுதம் போல் அவர் தன் எழுத்தைப் பயன் படுத்தியதுமில்லை . 'சென்ட் ஒப் எ வுமன்' என்றொரு ஆங்கிலப் படம். மார்டின் ப்ரெஸ்ட் டின் இயக்கத்தில் 'அல் பஸீனோ' நாயகனாக நடித்தது. விழிப் புலனற்ற அந்த நாயகன் ஒரு பெண்ணிடம் வீசும் நறுமணத்தைக் கொண்டு, அவள் பயன் படுத்தியிருப்பது எந்த வகை வாசனைத் திரவியத்தை எனத் துல்லியமாகக் கூறி விடுவான்.

அதே போன்றதுதான் தேவமுகுந்தன் கதைகள் பற்றிய என்னுடைய முகர் திறனும். நான் ஆரம்பத்தில் படித்த இரண்டு கதைகளின் வாசனையும் அவரை எனக்கு அடையாளம் காட்டப் போதுமானவை.

என்னுடைய நோக்கு நிலைக்கும், அவருடைய பார்வைக் கோணத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. என்னைப் போன்றே அவரும் ஒவ்வாத சூழலின் நெருக்குவாரத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவர். சூழ நடக்கும் அபத்த நாடகக் காட்சிகளைப் பார்த்து மனதுக்குள் ஒரு குமைச்சல்.. கைகள் கட்டப் பட்டிருக்கும் மத்தியதர வர்க்க சிறு பான்மையினருக்கே உரிய மனப் புகைச்சல் ,ஆற்றாமை, சலிப்பு, தவிப்பு, வெறுப்பு, இவற்றின் பார்வையாளராக இருக்க நேர்ந்து விட்ட அவலத்தின் மீதான கொதிப்பு..... இவைதான் தேவமுகுந்தனின் இந்தப் பத்துக் கதைகளும் என் முன்னால் விரித்து விட்ட அவருடைய உலகம்.

அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்களின் முன்னுரை, இந்தத் தொகுதி பற்றி அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த சில விமர்சனக் குறிப்புகள் யாவும் தேவ முகுந்தனை வேறொரு திசைக்கு நகர்த்திச் செல்ல முயல்கின்றன. தேவ முகுந்தனைத் தமிழியப் பற்றாளராகவும், தமிழ்த் தேசிய ஆதரவு எழுத்தாளராகவும் ஒரு சிமிழுக்குள் அடைக்க முயலுகின்றன.

ஆனால் அரசியல் பதற்றம் மிகுந்த, இன உறவு பிளவுண்ட ஒரு சூழலில் உருவாகும் வெறுப்பையும், அதிருப்தியையும், கசப்புணர்வையுமே முகுந்தனின் எழுத்துகளில் நான் காண்கின்றேன். அவர் முன் திட்டங்களுடனோ, ஏதாவது ஒரு கொள்கை விளக்கத்துக்காகவோ எழுதியதாக நான் உணரவில்லை. அவருடைய பெரும் பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தத்தின் பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும் தலை நகர் கொழும்பில் நிகழ்கின்றன. அங்கு ஒரு தமிழ் வாலிபன் எதிர் கொண்ட நாளாந்த நெருக்குவாரங்களில் நூறில் ஒரு பங்குதான் தேவமுகுந்தனின் கதைகளில் பதிவாகி இருக்கின்றன. அதனால் உண்டாகும் விமர்சனப் பதற்றங்கள் அனாவசியமானவை .

இலக்கியம் என்பது ஒரு கருத்தை, சித்தாந்தத்தை, தத்துவத்தைப் பிரச்சாரம் செய்து பரப்புவதற்காக எழுதப் படுவதல்ல. அதிகாலையில் வானொலியில் குரல் தரும் நற் சிந்தனையாளனுக்கும், இலக்கிய எழுத்தாளனுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. படைப்பாளி ஒருவனின் மனதில் உந்துதல் எதுவுமற்று உருவாக்கப்படும் சொற்கூட்டங்கள் படைப்பாகா.; ஓர் இலக்கியத்தின் பணி உணர்வை உருவாக்குவது. உண்மை ஒன்றை எழுத்துருவில் அது மறுபடியும் நிகழ்த்திக் காட்ட முயல்கின்றது. கடலை மட்டுமல்லாமல் அதன் அடி நீரோட்டத்தையும் காண்பிப்பது ஒரு படைப்பாளியின் முன் உள்ள சவால். ஓர் இலக்கியப் படைப்பு என்பது அதைப் படிக்கின்ற ஒருவருடைய மனதில் சலனங்களையோ, பிரதி பலிப்புகளையோ உண்டு பண்ணாமல் போனால் அதன் பிறப்புக்கும், பிரசுரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. நல்ல இலக்கியத்தின் இன்னொரு முக்கிய லட்சணம் அது கொண்டிருக்கும் மொழியும், நுட்பங்களும் ஆகும்.

ஈழத்தில் இன்று நிறையப் பேர்கள் கதைகள் எழுதுகின்றனர். பத்திரிகைகள், சஞ்சிகைகளின் தவிர்க்க முடியாத அம்சங்களாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை சிறுகதை வடிவத்தை பிரக்ஞை பூர்வமாக புரிந்து கொண்டவையா, தமிழ் சிறுகதை இலக்கியம் என்ற தொடரோட்டத்தையும், பெரும் பரப்பையும் சரிவரப் புரிந்து கொண்டு உரிய முறையில் தம்மைப் புதுப்பித்து வெளிப்பட்டவையா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

படைப்பாளுமை அற்ற பலர் இன்று இருண்மையான வாக்கியங்கள் மூலமாகவும், அதிர்ச்சியான மொழிப் பிரயோகங்கள் வாயிலாகவும், தனிநபர்த் தாக்குதல்கள் வழியாகவும் இலக்கிய அந்தஸ்த்தைக் கோரி நிற்பதை; இப்போதெல்லாம் காண்கின்றோம். இவற்றை ஒரு புன்னகையுடன் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை. தேவ முகுந்தன் இந்தக் குறுக்குவழிகளில் நம்பிக்கை வைக்காத ஒரு படைப்பாளி. நேரடியாகக் கதை சொல்லும் எளிமையான பாணியில் நம்பிக்கை கொண்டவர். சொற்களில் பதினோராயிரம் வோல்ட்ஸ் மின்சாரத்தை வைத்தால்தான் வாசகன் அதிர்ச்சிக்குள்ளாவான் என்பது போன்ற அசட்டுத் தனமான எண்ணங்கள் அவரிடம் இல்லை. இந்த உலகத்தின் முக்கியமான படைப்பாளிகளைப் போலவே தேவ முகுந்தனும் சுய அனுபவச் சூட்டுடன், தன் சூழலை, தான் கண்டவற்றைப் பிரதி பலிக்க முயல்கின்றார்.

'மர நாய்கள்' கதை இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. நாம் பறிகொடுத்த சுதந்திரம் என்பது கோழியாகவும், இராணுவ அடக்கு முறை என்பது மர நாயாகவும் இங்கே உருவகப் படுத்தப் படுகின்றது. எந்த விதமான துருத்தலும் இன்றி வெளிப்படும் இந்த குறியீடுகள் தேவமுகுந்தனின் கலைத் திறனுக்கு சிறந்த அத்தாட்சி. மலேசியாவின் நிலக் காட்சிகளில் இரட்டைக் கோபுரங்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இணைய முடியாத இரண்டு இனங்களின் மனப் பாங்குகளை விபரிக்கும், மலேசியாவைக் களமாகக் கொண்ட கதைக்கு தேவமுகுந்தன் மிகவும் பொருத்தமாக இட்டிருக்கும் தலைப்பு 'இரட்டைக் கோபுரங்கள்'.

நம்மில் பல எழுத்தாளர்களுக்கு சிறு கதையை எங்கே தொடங்கி, எங்கே முத்தாய்ப்பு வைப்பது என்பது தெரிவதில்லை. ஆனால் அந்தக் கலை தேவமுகுந்தனுக்குக் கை வந்திருக்கின்றது. 'இடைவெளி' கதையில் அலுவலகத்தின் பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த சகபாடிகள் செய்கைகளாலும், நடத்தைகளாலும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். கதையின் முத்தாய்ப்பாக தேவமுகுந்தன் வைக்கும் வாக்கியம் இது.

'அறையின் சுவரில் அமைக்கப் பட்டிருக்கும் பீடத்திலிருந்த புத்த பகவான் சாந்தம் தவழும் வதனத்துடன் தியானித்துக் கொண்டிருந்தார்.'

இதே போல் 'சிவா ' என்றொரு கதை.

தமிழ் மாணவர்களைப் பெரிதும் பொருட் படுத்தாமல் பல்கலைக் கழகத்தில் சிங்கள மானவர்களுடனேயே நெருக்கம் பேணிய சிவா என்ற தமிழ் மாணவன் ஒரு நாள் கைது செய்யப் படுகின்றான். ஆறு வருஷங்கள் சிறையில் இருந்து குற்றம் எதுவும் நிரூபிக்கப் படாமல் சித்திரவதை வடுக்களுடன் விடுதலையாகி வெளியே வருகின்றான். பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த அவனுடைய காதலி உட்பட அனைவரும் ஒதுங்கி மறைகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் அவன் காணாமல் போய் விடுகின்றான். இந்தக் கதையின் முத்தாய்ப்பும் தேவமுகுந்தனின் கலைத் தேர்ச்சிக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

இவ்வாறு அவர் கதையை முடிக்கின்றார்.

'...காணாமல் போனோர் உறவினர் சங்கம் நடத்திய ஊர்வலத்தில் வெள்ளைச் சேலை உடுத்திய வயோதிபப் பெண் ஒருத்தி சிவாவின் புகைப் படத்தைக் காவிய படி நடந்து சென்றதை டி.வி. செய்தி அறிக்கையில் தான் பார்த்ததாக அழுத படி ரஞ்சன் சொன்னான்.

சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவன் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் வாலிபன் ஒருவன் கொழும்பு சூழலில் எதிர் கொள்ளும் சங்கடங்களை இடைவெளி, ஒரு சுதந்திரநாள் ஆகிய கதைகள் மிக இயல்பாக விபரிக்கின்றன. 'கண்ணீரினூடே தெரியும் வீதி' மோதலில் சம்பந்தப் பட்ட இரு தரப்பினரின் துயரத்தையும் பேசுகின்றது. நுஹ்மான் அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுவது போல இந்தத் தொகுப்பின் மிகவும் சிறந்த கதையாக இதையே கூற வேண்டும்.

ஏட்டுச் சுரைக் காயை எவ்விதம் கறிக்குப் பயன் படுத்தலாம் என்பது போல் நடத்தப் படும் அரச திணைக்களங்களின் பயிற்சி முகாம்களை 'வழி காட்டிகள் ' கதை கிண்டலடிக்கின்றது.

'கூட்டத்தில் ஒருவன்' கதையைப் படிக்கும் போது சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றின் வரிகள் ஞாபகம் வருகின்றன.

'..காலமே! எதற்கு என்னை இங்கெல்லாம்

அழைத்துச் செல்கிறாய்?

என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே !'

இந்தக் கதை ரட்சகர்கள் போல் தங்களைத் தாங்களே உருப் பெருப்பித்துக் கொண்டு போலி முகம் காட்டும் உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தைகளை விமர்சிக்கின்றது.

படித்து விட்டு வேலையற்று மனச் சலிப்புடனும், சோர்வுடனும் திரியும் ஒருவனின் பறப்பதற்கு முந்திய கூட்டுப் புழு காலத்தை 'இவன் ' என்ற கதை விபரிக்கின்றது.

சின்ன மாமா, இந்தத் தொகுப்பில் உள்ள சிறப்பான கதை. சாதியில் தன்னை விட உயர்ந்த ஒருத்தியை காதலித்து திருமணம் செய்த பின் தன் குடும்பத்தை முற்றிலும் கை விட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் அஞ்சலி நிகழ்வை ஒட்டியதாக அமையும் இந்தக் கதை ஒரே கல்லில் இரண்டு மாங் காய்களை வீழ்த்துகின்றது. ஒன்று எழுத்தாளனின் போலி முகம்.மற்றது அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுவோரின் பொய் நாக்கு.

இறுதியாக நமது அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் 'எழுத்தாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய அறம் 'பற்றி சில வார்த்தைகள் எழுதியுள்ளார்.

அவர் கூறுகின்றார்:

'..கடந்த முப்பது ஆண்டு கால இன முரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சனைகளை ஈழத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகின்றேன். பெரும் பாலும் இவை பாதிக்கப் பட்டவர்களின் குரலாக, சார்பு நிலைப் பட்டவையாகவே காணப் படுகின்றன. சிங்கள மேலாதிக்கம், இராணுவ ஒடுக்குமுறை,, அரச பயங்கரவாதம் பற்றிய விபரிப்புகளாகவே அவை பெரிதும் வெளிப் பட்டுள்ளன. அது ஒரு வகையில் நியாயமாகவும் தோன்றலாம் .எனினும் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் 'ஒரு பக்கச் சார்பானது 'என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்.

இந்தியப் பிரிவினையின் போது இந்துக்களும், முஸ்லீம்களும் பல லட்சக் கணக்கில் கொள்ளப் பட்டதையும், புலம் பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதாத் ஹசன் மண்டோ, கே.ஏ .அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியதை நினைத்துப் பார்க்கின்றேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்துகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இது நுஹ்மான் அவர்களின் கூற்று.

இந்தக் கூற்றுடன் நான் இங்கே முரண்பட வேண்டி உள்ளது.முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது

தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல. அவர் சூழலால் பாதிக்கப் பட்ட ஒரு சாமானியர். அவருக்கு முன்னால் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.

ஒடுக்கு முறையை சகித்துக் கொண்டு, கூனிக் குறுகி, வளைந்து கொடுத்து, எருமைத் தோலுடன் பாண்டியன் பரிசுக்காக அரண்மனை வாசலில் காத்திருப்பதா?

அல்லது

உரத்த குரலில் இல்லா விட்டாலும் பரவாயில்லை ஒரு சிறு முனகல் தொனியிலாவது நம் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்வதா?

தேவமுகுந்தன் இரண்டாவது காரியத்தை செய்திருக்கிறார் என்றே நான் நம்புகின்றேன். எழுத்தாளனின் அறம் என்பது எரிமலை மேல் இருந்து கண்களை மூடிக் கொண்டு தவமியற்றுவது அல்ல. ஓர் எழுத்தாளனின் பணி அப்பத்தைப் பிய்த்து பாவிகளுக்கும், அப்பாவிகளுக்கும் சம பங்கிடுவதுமல்ல.

தராசுத் தட்டின் முள் சரி நடுவில் இருக்கிறதா எனப் பார்ப்பதும், இரண்டு தட்டுகளின் எடைகளை சம அளவில் பேணுவதும் சில்லறைக் கடைக் காரர் ஒருவரின் வேலை. ஆண்டாண்டு காலமாக அநீதி இழைக்கப் பட்ட, ஒடுக்கப் பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஈனஸ்வரமான குரலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

எம். ஏ. நுஃமான்

தேவமுகுந்தனின் சிறுகதைகள்

தேவமுகுந்தனின் சிறுகதைகளை இப்பொழுதுதான் முழுமையாகப் படித்தேன். இவர் 1990களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறார். கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் பத்துக் கதைகள்தான் எழுதியிருக்கிறார். இவரது முதல் கதை 'மரநாய்கள்' 1993ல் அச்சில் வெளிவந்திருக்கிறது. ஏனைய ஒன்பது கதைகளும் 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இடைப்பட்ட சுமார் பதினைந்து ஆண்டுகளில் இவர் கதைகள் எவையும் எழுதவில்லை. குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது.

தேவராசா முகுந்தன் என்ற சொந்தப் பெயர்கொண்ட தேவமுகுந்தன் தன் பெரும்பாலான கதைகளை நிர்மலன் என்ற புனைபெயரிலேயே எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனினும், கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக கொழும்பிலேயே வாழ்ந்துவருகிறார். இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, தேசிய கல்வி நிறுவகத்தில் செயற் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி, அங்கு பணியாற்றிய காலத்திலேயே அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் பட்ட மேற் படிப்பை முடித்து, தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவரது பெரும்பாலான கதைகள் கொழும்பையே களமாகக் கொண்டிருப்பதை இப்பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது. மரநாய்கள் மட்டும் யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டது. இரட்டைக் கோபுரங்கள் மலேசியப் பின்னணியில் இலங்கையரின் அனுபவத்தைப் பேசுகிறது. ஏனைய கதைகளின் பிரதான களம் கொழும்புதான்.1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பொருள் இனமுரண்பாடும் யுத்த அவலமும்தான்.

இனமுரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்த சூழல் தனிமனிதர்களின் வாழ்வை, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லம் பாதித்திருக்கின்றது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகாலப் பகுதியில் எழுந்த மிகப் பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, யுத்தத்தின் குழந்தைகளான முகுந்தன் போன்ற புதிய தலைமுறையினரின் எழுத்தில் இதுவே முனைப்பாக வெளிப்படுகின்றது.

இவர்கள் இன உறவின் சுகத்தை அன்றி, இனப் பிளவின் குரூரத்தையே அனுபவித்தவர்கள். இவர்களின் படைப்புகள் அந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைவது தவிர்க்க முடியாதது.

முகுந்தனின் முதலாவது கதையான 'மரநாய்கள்' யுத்தத்தினால் சிதைந்து, ராணுவம் முகாமிட்டிருந்த யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றின் அன்றாட வாழ்க்கையை சிறுவன் கோபியின் அனுபவத்தின் ஊடாகப் பேசுகின்றது. அந்தக் கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருந்த மக்களில் சிலர் வீடு திரும்பி அழிபாடுகளைத் திருத்தி வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்குகிறார்கள். ராணுவம் பள்ளிக் கூடத்தில் முகாமிட்டுள்ளது. ராணுவம் கோழிகளைப் பிடித்துச் செல்வதால் அண்மையிலிருந்த கோழிப் பண்ணை மூடப்பட நேர்கிறது. குறைந்த விலைக்குக் கோழிகளை விற்கிறார்கள். கோபியின் அம்மா ஒரு கோழி வாங்கிவருகிறார். அவன் அதை ஆசையோடு வளர்க்கிறான். இரவில் கோழியைப் பிடிக்க வரும் மரநாயை அண்ணன் துரத்தியடிக்கிறான். ஆனால் ராணுவம் ஊரெல்லாம் கோழிகளைப் பிடிக்கத் தொடங்குகிறது. ஒருநாள் வீடுவீடாகப் போய் கோழிபிடித்துவரும் ராணுவத்தினர் கோபியின் கண்முன்னாலேயே அவனது கோழியை அடித்துக் கொன்று உரப்பையில் போட்டுத் தூக்கிச் செல்கிறார்கள். கோபி அழுதுகொண்டு தோட்டத்தில் நின்ற அண்ணனிடம் சொல்கிறான். கதை இவ்வாறு முடிகிறது:'வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழேபோட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான். 'மரநாய்களைத் துரத்தவேண்டும்' ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.'இக்கதையில் 'மரநாய்கள்' ராணுவத்துக்குக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட கிராமத்தில் உரிமையும் சுதந்திரமும் அற்ற மக்களின் வாழ்வையும் அவர்கள் மனதில் கொதிப்பு ஏறிவருவதையும் இக்கதை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றது. யாழ்ப்பாண யுத்த சூழலை மையமாகக் கொண்டு தேவமுகுந்தன் எழுதிய கதை இது ஒன்றுதான்.

இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தம் காரணமாக இன உறவு பிளவுண்ட தலைநகர் கொழும்பில், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றன. இனமுரண்பாடும் மோதலும் உச்சத்தில் இருந்த யுத்த காலத்தில் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் பொதுமக்களை, குறிப்பாகச் சிங்களவர்களைப் பெருமளவில் பாதித்த புலிகளின் தொடர்ச்சியான குண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக பொலிஸ், ராணுவக் கெடுபிடிகளும் கைதுகளும் அதிகரித்தன. எந்தக் கணத்தில், எங்கு, எது நடக்குமோ என்ற பீதி எல்லோர் மனதிலும் கவிந்திருந்தது. உத்தரவாதம் அற்ற வாழ்க்கைச் சூழல் எல்லோரையும் உலுக்கிக்கொண்டிருந்தது. புலிகள் யார், பொதுமக்கள் யார் என்று வேறுபிரித்தறிய முடியாத நிலையில் தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துக்கு உள்ளாகினர். அரசின் நடவடிக்கைகளும் ஊடகப் பிரச்சாரமும் இதைத் தீவிரப்படுத்தின. புலிகளின் அரசியலுக்கு இது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக, தமிழர்களைப் பொறுத்தவரை இது மரண விளையாட்டாகவே அமைந்தது. தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் ஒரு பொய்த்தகவல் கூட ஒருவரின் கைதுக்கும், சித்திரவதைக்கும், சிறைவாழ்வுக்கும் அல்லது மரணத்துக்கும் கூடக் காரணமாகும் ஆபத்து எப்போதும் இருந்தது. தனிமனித உரிமைகள் செல்லாக் காசாகிய நிலைமையே யதார்த்தமாயிற்று.

சிங்கள் தேசிய வாதம் தமிழ் வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும், தமிழ்த் தேசியவாதம் சிங்கள வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும் இது நல்ல பசளையாயிற்று.இந்த யதார்த்தத்தை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டது என்பது ஒரு முக்கியமான கேள்வி. மிகப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ்த் தேசியவாத நேக்கு நிலையிலிருந்தே இதைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே எனது அவதானிப்பு. தேவமுகுந்தன் இதற்கு விலக்கல்ல என்பதையே இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் உணர்த்துகின்றன. அவருடைய கதைகள் மிக வலுவாக இந்த அனுபவத்தைப் பேசுகின்றன. பெரும்பாலான கதைகள் அவருடைய சொந்த அனுபவத்தைப் பேசுகின்றனவோ என்று எண்ணத் தூண்டும் வகையில் உண்மைக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன.

'சிவா' இத்தொகுப்பிலுள்ள மிக உருக்கமான கதைகளுள் ஒன்று. அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன். மிகுந்த திறமைசாலி. சிங்கள மாணவர்களுடனேயே மிக நெருங்கிப் பழகுகிறான். ஒரு சிங்கள மாணவியைக் காதலிக்கிறான். ஆனால் ஒருநாள் இரவு பல்கலைக்கழகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் சந்தேகத்தின் பேரில் சோதனைச் சாவடியில் அவன் கைதுசெய்யப்படுவதோடு எல்லாமே மாறுகிறது. வாயிற் காவன் உட்பட நெருங்கிப் பழகிய சிங்கள மாணவர்கள் எல்லோரும் தமிழ் மாணவர்கள்மீது சந்தேகப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்துக்குள் பொலிஸ் புகுந்து தமிழ் மாணவர்களை எல்லாம் விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. சிவா ஆறுவருடங்கள் சிறையில் இருந்து குற்றம் நிரூபிக்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளான வடுக்களுடன் வெளியே வருகிறான். நண்பர்களிடமிருந்து தனிமைப்படுகிறான். பின்னர் (மீண்டும் கைதுசெய்யப்பட்டு) காணாமல்போய்விடுகிறான்.சிவாவுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பன் முரளிதான் கதைசொல்லி. ஆறுவருடங்கள் சிறையிலிருந்து மீண்ட சிவாவை ஒரு கலியாண வீட்டில் சந்திப்பதுடன் கதை தொடங்குகிறது. பின்னர் முரளி பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறான். இறுதியில் சிவா மீண்டும் காணாமற்போனது பற்றி ஒரு நண்பன் சொன்ன தகவலுடன் கதையை முடிக்கிறான் முரளி. எனினும் கதை நமக்குள் அத்துடன் முடிவதில்லை. இன மோதலில் பலிக்கடாக்களாகிப்போன ஏராளமான அப்பாவி சிவாக்களின் கதைகள் நம்முள் தொடர்கின்றன.

'இடைவெளி', 'ஒரு சுதந்திர நாள்' ஆகிய இரு கதைகளையும் 'சிவா'வுடன் இணைத்துப் பார்க்கலாம். இடைவெளி கதையில்வரும் ஜெகன் கொழும்பில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறான். சக சிங்கள ஊழியர்களுடன் நட்புடன் பழகுகிறான். எனினும,; அலுவலகத்தில் தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் போடுவது தொடர்பாகவும், சுனாமி நிவாரணத்தக்குச் சேர்க்கும் பணத்தை தமிழ்ப் பிரதேசத்துக்கும் கொடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் சக ஊழியர்களுடன் உரிமைப் போராட்டம் நடத்தி 'பயங்கரவாதி' என்ற பட்டமும் பெறுகிறான். அவன் அலுவலகத்துக்கு லீவு போட்ட ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. அவனது லீவையும் குண்டுவெடிப்பையும் தொடர்புபடுத்தி அலுவலகத்தில் பலர் அவனைச் சந்தேகிக்கிறார்கள். கடைசியாகக் குண்டு வெடித்த அன்று அவன் தன் குழந்தையை நவலோக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருந்தான். அவன் வெளியே வந்த போது வீதியில் வாகனங்கள் எதுவும் இல்லை. ஆட்டோவுக்காக அவன் அங்கும் இங்கும் ஓடித்திருந்ததை அவனுடன் வேலைசெய்யும் யாரோ கண்டிருக்கிறார்கள். மறுநாள் பொலிஸ்காரர்கள் அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்காக ஜெகனை அழைத்துச் செல்வதோடு கதை முடிகிறது.

கொழும்பில் வாடகை அறையில் வாழ்ந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் யாழ்ப்பாண மாணவன் ஒருவனின் சுதந்திர தின அனுபவத்தைக் கூறுகின்றது 'ஒரு சுதந்திர நாள்'என்ற கதை. சுதந்திர தினத்தில் தமிழர்கள் சுதந்திரம் இல்லாமல் வாழும் முரண்தான் கதைப்பொருள். பாதுகாப்புக் கெடுபிடி காரணமாக பகலுணவுக்குச் செல்லும்போது அவன் பரிசோதனைக்கு ஆளாவது, அவன் வழக்கமாகச் சாப்பிடும் லக்ஷ;மி பவன் மூடிக்கிடப்பது, பொலிஸ் பதிவு புதிப்பிக்கப்படாததால் அங்கு வேலைசெய்த மலையக இளைஞர்களை பொலிஸ் அள்ளிச் சென்ற செய்தி, பெரிய தேசியக் கொடியைப் பிடித்தவாறு சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் பொப்பிசை பாடியவாறு பஸ்சில் சுற்றுலாச் செல்வது, இனியும் சாப்பாட்டுக்கு அலைந்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாது அறையில் இருக்கும் பாணைச் சாப்பிடலாம் என்று அவன் அறைக்குத் திரும்புவது என்று கதை விரிந்து முடிகிறது. சிங்களவர்களுக்கே சுதந்திரம், தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதை கதை அழுத்திக் கூறுகின்றது.

'இரட்டைக் கோபுரம்' மலேசியப் பிண்ணணியில் அமைந்தாலும் தொனிப்பொருளைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட மூன்று கதைகளுடனும் உறவுடையது எனலாம். சுனில், லால், முரளி மூவரும் அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் உயர் கல்வி கற்பவர்கள். ஒரே வாடகை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு மிகுந்த நட்புடன் வாழ்பவர்கள். மலேசிய இலங்கையரான சுப்பிரமணியத்துடன் அவர்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. சிங்களவர், தமிழர் என்ற முரண்பாடுகள் எவையும் அவர்களை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. அப்படி ஒரு அன்னியோன்யம். திடீரென சுனிலின் குழந்தை பேராதனை மருத்துவ மனையில் இறந்ததாகத் தகவல் வருகிறது. சுனிலின் தம்பி முரளியிடம்தான் தகவல் சொல்கிறான். உடனே அண்ணனை ஊருக்கு அனுப்பிவைக்கும்படி கேட்கிறான். சுனிலிடம் தகவலைச் சொல்லி அவனைத் தேற்றி விமான நிலையத்துக்கு அழைத்துவருகிறார்கள். சுப்பிரமணியம்தான் தன்னுடைய செலவில் பயணச் சீட்டு வாங்கி தன்னுடைய காரில் கூட்டிவருகிறார். விமானம் இரண்டுமணிக்கு கொழும்புக்குப் போகும், அங்கிருந்து சுனிலின் மச்சான் அவனைக் கண்டிக்கு அழைத்துச் செல்வான். ஆனால் அது நடக்கவில்லை. அன்றைக்கு கொழும்புக்கான விமானங்கள் எல்லாம் ரத்துச்செய்யப்பட்டுவிட்டன. கட்டுநாயக்கா விமான நிலையத்தைப் புலிகள் தாக்குவதாகச் செய்தி தெரிவிக்கப்படுகின்றது. தன் பயணம் தடைப்பட்ட ஆத்திரத்தில் 'பறத் தெமிலு' எனச் சுனில் திட்டுகிறான். கதை இவ்வளவுதான். முரளியால் சுனிலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தனக்குள் இப்படிச் சொல்லிக்கொள்கிறான்: 'என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை. சுனில் ஏன் 'பறத் தெமிலு' என்று ஏசுகிறான்? அவனின் பயணம் தடைப்பட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவனின் துயர் எங்களிலும் பரவியுள்ளபோது ஏன் எங்களைத் திட்டுகிறான்,' முரளிக்கு இது புரியாவிட்டாலும் இன முரண்பாடு மனித நடத்தையை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்பது இதன்மூலம் நமக்கு நன்கு புரிகின்றது.இதுவரை நாம் பார்த்த நான்கு கதைகளிலும் சிங்களவர் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்துநிலை வெளிப்படுவதைக் காணலாம்.

பாதிக்கப்பட்டவர்களின் நோக்குநிலையில் இருந்து நாம் இவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.'கண்ணீரினூடே தெரியும் வீதி' இனமோதல், யுத்தம் தொடர்பாக நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு கதை என்று நினைக்கிறேன். மோதலில் சம்பந்தப்பட்ட இரு சாராரின் துயர அனுபவமும் ஒரேசமயத்தில் இக்கதையில் பேசப்படுகின்றது. ஜயசிகுறு படைநடப்பு காலப் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. கதைசொல்லி ஒரு பல்கலைக்கழக மாணவன். கொழும்பில் கல்கிசையில் வாடகை அறையில் குடியிருக்கிறான். அவனது குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியிருக்கிறது. அப்பா கனடாவில். தம்பி நகுலன் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். ஒருநாள் பள்ளிக்குப் போனவன் திரும்பிவரவில்லை. அவனுடைய சைக்கிள்தான் திரும்பிவருகிறது. அவன் தானாக இயக்கத்தில் சேர்ந்தானா அல்லது பாலத்காரமாகச் சேர்க்கப்பட்டானா என்பதைக் கதைசொல்லி சொல்லவில்லை. தம்பி இயக்கத்தில் சேர்ந்தனால்தான் கதைசொல்லியின் குடும்பம் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல முடியவில்லை என்று நாம் யூகிக்கலாம். கிளிநொச்சியிலிருந்து அம்மா அவனுக்குக் கடிதம் எழுதியதினால் அவன் இரண்டுமுறை அறை மாறவேண்டி இருந்தது. கனடாவிலிருந்து அப்பா அனுப்பும் காசை வங்கிமூலம் கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கு அவன் வங்கி முகாமையாளரின் அவசியமற்ற விசாரணைக்கெல்லாம் உட்படவேண்டியிருக்கிறது.கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாக மூடிக்கிடக்கிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த அவனது பல்கலைக்கழக நண்பர்கள் எல்லாரும் ஊர் போய்விட்டார்கள். அவனால் கிளிநொச்சிக்குப் போகமுடியாது. அதனால் கொழும்பில் தங்கியிருக்கிறான். ஒரு தூக்கமற்ற இரவில் கதைசொல்லி இக்கதையைச் சொல்கிறான். கதை இவ்வாறு தொடங்குகிறது:

'நான்கைந்து மாதங்களாய் இதேமாதிரித்தான் இரவில் ஒழுங்காகத் தூங்க முடிவதில்லை. காலிவீதியைக் கிழித்து விரையும் அம்புலன்ஸ் வண்டிகளின் அவல ஒலிகள் என்னைத் திடுக்கிட்டு விழிக்கச் செய்கின்றன. பெரிய ஆஸ்பத்திரிக்கும் விமான நிலையத்திற்குமிடையே அவலக் குரலெழுப்பியபடி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடி விரைகின்றன. கல்கிசைச் சந்தியிலிருக்கும் மலர்ச்சாலைக்கு சடலங்களை ஏற்றியபடி வரும் இராணுவ டிரக் வண்டிகள் அவற்றை அங்கு இறக்கிவிட்டுச் செல்கின்றன. அவ்வண்டிகளின் முன் இருக்கைகளில் இராணுவ வீரர்கள் துயர்படிந்த முகத்தினராய் அமர்ந்திருப்பர். நகரெங்கும் வெண்கொடிகள் காற்றில் படபடக்கின்றன. நான் தங்குகிற அறையிருக்கும் கல்கிசை மார்க்கட்டுக்கு முன்னாலுள்ள வீதியிற்கூட இரு வீடுகளில் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளார்கள். அவ்வீட்டு முகப்புகளில் இராணுவச் சீருடை தரித்த இளைஞர்களின் பெரிய வர்ணப் புகைப்படங்களை வைத்துள்ளார்கள். அவற்றைப் பார்க்க அவர்களுக்கு என்னிலும் பார்க்க இரண்டு மூன்று வயது குறைவாய் இருக்கும் போலிருந்தது. இன்றுமாலை அவ்வீடுகளுக்குப் போய்க் கதைத்துவிட்டும் குடித்துவிட்டும் வந்த எனது அறையின் சொந்தக்காரர் குமுது அங்கிள், சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மல்லாவியிலிருந்து வவுனியா வந்துவிட்டனவென்றும் இன்று இரவு வீடுகளுக்கு வந்து நாளையிண்டைக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென்றும் சொல்லியிருந்தார். சொல்லும்போது அவர் குரல் தழுதழுத்தது. அவருக்குத் தெரியப் பிறந்து வளர்ந்து இறந்த பிள்ளைகள்.. அவர் தூக்கி வளர்த்த பிள்ளைகள் அவர்கள்...'தூக்கமற்ற அந்த அதிகாலையில் அவனுடைய அறைக்கதவு தட்டப்படுகிறது. போலிஸ் விசாரணைக்கு வந்துள்ளதோ என்ற தயக்கத்துடன் கதவைத் திறக்கிறான். வந்தவன் அறை நண்பன் நிக்சன். அவசரமாக அவனை வெள்ளவத்தைக்கு அழைத்துச் செல்கிறான். அவனது அப்பா அவனை அவசரமாக ரெலிபோன் எடுக்கச் சொன்னதாகச் சொல்கிறான். 'கோப்பாயில நகுலன் செத்திட்டானாம்' என்று அப்பா சொல்லி அழுகிறார். 'பொடி பெரியாஸ்பத்திரியில் இருக்காம்' என்று சொல்கிறார். கதை பின்வருமாறு முடிகிறது:'எனக்குத் தலை சுற்றுமாப்போல இருக்கு. நிக்ஸன் என்னைப் பிடித்தபடி கொமினிகேசனின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வருகிறான். நகுலனின் உடல் அநாதையாய் ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் இப்ப கிடக்கும். உடலில்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்.நாளைக்கு வீட்டுக்காரர் குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப்பபோகின்ற செத்தவீடுகளுக்குப் போகவேண்டும்.கண்ணீரினூடு வீதி தெரிகிறதுவெண்புறாக்களாய் சீருடையணிந்த பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலிவீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்குநோக்கி விரைகின்றன. வானம் வேறு அழுது தொலைக்கின்றது.'கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர் மீதும் கவிந்திருப்பதை எவ்விதப் பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்லுகின்றது. இத்தொகுப்பிலுள்ள தேவமுகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது.

'சிவா', 'இடைவெளி', 'இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப் பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது.'வழிகாட்டிகள்', 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளும் இனமுரண்பாட்டைப் பின்னணியாகக் கொண்டவை எனினும் பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் அணுகுகின்றன. இன மோதல் சூழலில் சமூகப் பிரக்ஞையற்ற உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தையை கிண்டலோடு விமர்சிக்கும் கதைகளாக இவற்றைக் கருதலாம். பிரச்சார வாடை சற்றுத் தூக்கலாக உள்ள மிகைப்படுத்தலாக இக்கதைகள் அமைகின்றன.

முகுந்தனின் கதைகள் எல்லாம் ஒரு வகையில் சுய அனுபவ வெளிப்பாடுகளாகக் கருதக்கூடியவையே எனினும் 'இவன்' என்ற கதை சுய அனுபவச் சாயலைச் சற்றுக் கூடுதலாகப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. பல்கலைக்கழகத்தில் படித்து முதல் வகுப்பில் சித்தியடைந்தும் பல ஆண்டுகளாக வேலையற்றிருக்கும் ஒரு பட்டதாரியின் அனுபவத்தைக் கதை விபரிக்கிறது. வேலையற்ற ஒரு தமிழ் இளைஞன் கொழும்பில் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளையும் அது சித்திரிக்கின்றது. பணமும் செல்வாக்கும் உடைய, தன்னைவிடப் படிப்பிலும் திறமையிலும் குறைந்த தனது தமிழ் நண்பர்கள் நல்ல தொழிலில் இருப்பதையும் தான் வேலையற்று அலைவதையும் கதைசொல்லி விரிவாக விபரிக்கிறான். ஒருவகையில் சற்று மிகைப்படுத்தலாகத் தோன்றினாலும் கதைசொல்லும் முறையில் இத்தொகுப்பில் உள்ள நல்ல கதைகளுள் இதையும் ஒன்றாகக் கருதலாம்.'

சின்ன மாமா' இத்தொகுப்பிலுள்ள ஒரு வித்தியாசமான கதை. போர்ச் சூழலோடு நேரடியான தொடர்பற்றது. சாதியில் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்தபின் தன் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்த ஒரு பிரபல எழுத்தாளரைப் பற்றியது கதை. ஒரு எழுத்தாளனின் போலி வாழ்க்கையை அம்பலப்படுத்துவது என்பதற்குமேல் சொல்லும் முறையில் கதை சிறப்பாக அமைந்துள்ளது.

பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக-புவியில் வரைபடத்தை சிறப்பாக வரைந்திருக்கிறார். பத்துக் கதைகளில் அரைவாசிக் கதைகளாவது நல்லகதைகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. அந்தவையில் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயம் இல்லை.கடந்த முப்பது ஆண்டுகால இனமுரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சினைகளை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகிறேன்.

பெரும்பாலும் இவை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, சார்புநிலைப்பட்டவையாகவே காணப்புடுகின்றன. சிங்கள மேலாதிக்கம், ராணுவ ஒடுக்குமுறை, அரசபயங்கரவாதம் பற்றிய விபரிப்பகளாகவே அவை பெரிதும் வெளிப்பட்டுள்ளன. அது ஒருவகையில் தவிர்க்கமுடியாதது என்று வாதிடலாம். அது ஒருவகையில் நியாயமாகவும் தோன்றலாம். எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூறவேண்டும்.இந்திய பிரிவினையின்போது இந்துக்களும் முஸ்லிம்களும் பல இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதத் ஹசன் மண்டோ, கே. ஏ. அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியவற்றை நான் நினைத்துப்பார்க்கிறேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்து மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' கதையை அவ்வகையிலேயே நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இது தொடர்பாக சுதாராஜின் உயிர்க்கசிவு சிறுகதைத் தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்ட ஒரு கருத்தோடு இக்குறிப்பை முடிக்க விரும்புகிறேன:; 'சோபாசக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் போல் யுத்த சூழலில் விடுதலை இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதியவர்களை ஈழத்தில் மிக அரிதாகவே காணமுடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் வன்முறையை அம்பலப்படுத்தி புதியதோர் உலகம் நாவலை எழுதிய நோபேட் விடுதலைப் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்லப்பட்ட ஒரு பெண் கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் போன்றவர்களின் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் இந்த மௌனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.'இந்த எதிர்பார்ப்புடன் தேவமுகுந்தனுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

-எம்.ஏ.நுஃமான்

Thursday, December 20, 2012

அ. யேசுராசா

மாணவர் - இளைஞர் ஆகியோரின் வளர்ச்சிக்காக , ‘தெரிதல்’ இதழை நான் வெளியிட்டபோது, 2004 ஆம் ஆண்டளவில் முகுந்தனுடன் தொடர்பு ஏற்பட்டது ; அதிலிருந்து அடிக்கடி தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வார். பின்னர், அவர் எழுதிய கதைகளை முதல் வாசகனாகப் படித்து, எனது கருத்துகளைப் பரிமாறினேன். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது ; இந்நிகழ்வில் பங்குபற்றுகிறேன்.

சுய அனுபவ வெளிப்பாட்டுக் கதைகளாக அவரின் கதைகள் உள்ளன ; இக்கதைகளில் முக்கிய பாத்திரங்களாகவரும் நான், இவன், ஜெகன், முரளி, கோபி ஆகியோரை முகுந்தனுடன் இணைத்து உணரலாம்! படைப்பு என்ற வகையில் இது முக்கியமான அம்சமாகும். புறநிலைச் சூழல். கலைஞனைப் பாதிக்கின்றது ; இப்பாதிப்பினால் எழும் உணர்வுகளை தனது சுயமான பார்வையில் பொருத்தமான வடிவங்களில் எழுத்தாளன் வெளிப்படுத்துகிறான். அனுபவம் - படைப்புந்தல் சாராமல் வரும் எழுத்துகள் வெறும் ' கருத்துக்கள்' கொண்டவையாக அமைந்து, உலர்ந்த படைப்புகளாகத் தோன்றும். இலக்கியத்தை வெறும் பிரசாரக் கருவியாக - சமூகமாற்றத்துக்கு மட்டுமேயான ஒன்றாகக் கருதுவோர் சுய அனுபவ வெளிப்பாட்டுக்கு முக்கியம் கொடுப்பதில்லை ; கருத்துக்களுக்கு மட்டுமே முதன்மை அளிக்கின்றனர் ; அதனால் அவ்வாறான படைப்புகள் 'தயாரிப்புகளாக' - கட்டுரைகளாக - வறண்டுபோகின்றன. “கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் வியாசங்கள் எழுதுவேன் “ எனப் பாரதி ஓரிடத்தில் சரியாகத்தான் கூறியிருக்கிறான்! இச் சுய அனுபவ வெளிப்பாடு முகுந்தனின் கதைகளிற்கு வலிமையைச் சேர்க்கிறது.

இலங்கையில் சிங்கள - தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளாகத் தொடரும் இன முரண்பாட்டுப் பிரச்சினை யுத்தம் என்ற நிலைக்கு உயர்ந்து ,மாபெரும் இனப்படுகொலையில் முடிவுக்கு வந்துள்ளது. நடைமுறை வாழ்வில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே ஓர் இடைவெளி தொடர்ந்தபடிதான் உள்ளது . தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படும்போதே இந்த 'இடைவெளி' மறையும். இந்த யதார்த்த ' இடைவெளி ' முகுந்தனின் கதைகளில் முக்கியமானதாயுள்ளது ; இது கதைகளுக்குக் கனதியைச் சேர்க்கிறது. சிவா, இடைவெளி, இரட்டைக்கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய கதைகளில் இதைக் காணலாம்!

யுத்தச் சூழலின் தாக்கத்தை கண்ணீரினூடே தெரியும் வீதி.... , மரநாய்கள் ஆகிய இரு கதைகள் மையமாக வெளிப்படுத்துகின்றன. முதற் கதை முக்கியமானதெனப் பலரும் கருத்துக் கொண்டுள்ளனர் ; போரினால் ஏற்படும் மரணங்கள் இரண்டு இனங்களுக்கும் துயரை ஏற்படுத்துவதை - மானுட அவலத்தை - அது நன்கு வெளிப்படுத்துகிறது. மரநாய்கள் இந்திய அமைதிப் படையைக் குறியீடாகக் கொண்டிருந்தபோதும், அக்குறியீடு இன்று வேறொன்றுக்குமாகவுமுள்ளது!

அமைப்புக்களின் சீர்கேடுகளை வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகள் சித்திரிக்கின்றன. உறுப்பினரின் அபத்தச் செயற்பாடுகள் கிண்டலுடனும் கோபத்துடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சின்ன மாமா கதை ஒரு போலி எழுத்தாளனைப் பற்றிய நல்ல கதை. எழுத்தாளனைப்பற்றிக் கதை எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம். அவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்றவகையில், கதைக்குரிய பாத்திரம்தான். ஆயினும் அவ்வாறு எழுதும்போது குறித்த நபரின் பெயரைச் சுட்டாது அவனது சீர்கேடுகள், முரண்பாடுகள் என்பவற்றை உண்மைத் தன்மையுடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தவேண்டும். தற்போது பின்னவீனத்துவம் என்ற பெயரில், சில உண்மைகளுடன் பொய்யான புனைவுகளையும் சேர்த்து, குறிப்பான யாரையாவது இழிவுபடுத்த - தார்மீக நிலைப்பாடு ஏதுமற்ற சிலர் முயல்கின்றனர் ; வக்கிர புத்திகொண்ட இந்த எழுத்துக்களை, அவர்களைப்போன்று வக்கிரபுத்தி கொண்டவர்களே இரசிக்கவும் செய்கின்றனர்! ஆனால், இக்குறைபாடு இல்லாமல் நல்லதொரு கதையாக ' சின்ன மாமா' கதை உள்ளது.

இவ்வாறான எல்லாக் கதைகளினதும் உள்ளடக்கங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன எனவும், பார்க்க வேண்டும். சாதாரண மொழியில் - தெளிவானவையாக அவை படைக்கப்பட்டுள்ளன ; தமிழக எழுத்தாளரான அசோகமித்திரனி டமும் சாதாரண மொழியில் சிறந்த கதைகள் படைக்கும் பண்புதான் காணப்படும். பல கதைகளில் விபரங்கள் அடுக்கப்படுகின்றன ; இது முகுந்தனின் தனி இயல்பு சார்ந்தது. சு. மகேந்திரன் என்ற ஈழத்து எழுத்தாளரிடமும் இப்பண்பு சிறப்பானதாக உள்ளது. விபரங்கள் கேலியுடன் தரப்படும்போது வாசிப்பவன் இரசிப்புடன் சிரிக்கவும், சில இடங்களில் கோபிக்கவும் நேர்கிறது.

" புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் முகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார்" என்று தனது பின்னுரையில் நுஹ்மான் சொல்வதை ஏற்றாலும், பொதுவான எழுத்தாளர் என்ற வகையில் என்ன இடத்தை அவர் பெறுகிறார் என்று பார்ப்பதும் நல்லதெனப் படுகிறது. அவ்வாறு பார்க்கையில் அவரும் அவரது இந்த நூலும் முக்கியமான பாராட்டைப் பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர்.

சரி, புதிய தலைமுறை அல்லாத பழைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பிந்தியகாலப் படைப்புகள் எல்லாம் தரமாகத்தான் உள்ளனவா என்ற கேள்வியும், இங்கு எழுகிறது. க. சட்டநாதனின் 'மனமடிப்புகளில்....' , 'அந்த மரணமும் அவர்களும் ' ஆகிய சிறுகதைகள் நல்ல கதைகள் அல்ல! முந்தியது வெறும் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை போன்றுள்ளது! ; மற்றது ஒரு போலி யதார்த்தக் கதையாக உள்ளது. மு. பொன்னம்பலத்தின் ' வரலாற்றுச் சூழல் ' என்ற கதை , ஒரு கட்டுரையே அல்லாது சிறுகதையாகக் கொள்ளத்தக்கதல்ல! இவ்வாறே அவரது பிந்திய தொகுதியான 'முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை' யிலுள்ள அரைவாசிக் கதைகள், நல்ல கதைகள் அல்ல! கே. ஆர். டேவிட் எழுதி அண்மையில் வந்த தொகுதியின் தலைப்புக் கதையான ' பாடுகள்' என்பதும், போலியான கதையாகவுள்ளது ; கிறிஸ்துமஸ் இரவில் நடப்பதான அக்கதை, பொருத்தமில்லாதமுறையில் - வலிந்து - சில விடயங்களை வெளிப்படுத்தச் ‘செய்யப்பட்ட ‘தொன்றாகவே காணப்படுகிறது!

இந்நிலையில், முகுந்தன் பொறுப்புடன் தொடர்ந்து எழுதி நல்ல கதைகளைத் தரவேண்டுமெனச் சொல்லி, எனக்குத் தரப்பட்ட வாய்ப்புக்கும், இதுவரை எனது பேச்சைக் கேட்டமைக்கும் நன்றி கூறி அமைகிறேன் ; வணக்கம்

!