Saturday, January 19, 2013

தெளிவத்தை ஜோசப்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...,

ஈழத்தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு ஆரோக்கியமான புதிய வரவு தேவமுகுந்தன்.

இவருடைய பத்துக் கதைகளடங்கிய சிறுகதைத் தொகுதி கண்ணீரினூடே தெரியும் வீதி...இமுதல் சிறுகதைத் தொகுதி இது.

பிரபல்யமிக்க பதிப்பகமான காலச்சுவடு 2012 ஆகஸ்டில் வெளியிட்டிருக்கும் நூல். காலச்சுவடு பதிப்பக வெளயிPடாக வந்திருப்பதும் தேவமுகுந்தனுக்கு ஒரு சிறப்பே. 1992 ல் தான் கதை எழுத ஆரம்பித்தேன் என்றும் அந்த முதல் கதைக்குப் பிறகு ஒரு பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகே 2008 லிருந்து மீண்டம் சிறுகதைகள் எழுதத் தொடங்கிதாகவும் குறிக்கும் தேவமுகுந்தன், அ. யேசுராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். உற்சாகத்தையும் செம்மைப்படத்தலின் அவசியத்தையும் ஏற்படத்தியவர் யேசுராசா என்றும் குறிக்கின்றார்.

பேராசிரியர் நுஃமானின் இவருடைய கதைகள் பற்றியதொரு விரிவான அறிமுகம் பின்னுரையாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட தேவராசா முகுந்தன் பிந்திய எண்பதுகளிலிருந்தே கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர். தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியபோதே அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று மலேசியாவில் பட்டமேற்படிப்புமுடித்துத் திரும்பி தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தத் தொகுதியில் பத்துக் கதைகள் இருக்கின்றன. அவைகளில் மூன்று கலைமுகத்திலும் இரண்டு கனடாவின் காலத்திலும் ஞானம், ஜீவநதி, தினக்குரல், யுகமாயினி, ஈழநாதம் ஆகியவைகளில் ஒவ்வொன்றுமாக வெளிவந்தவை.

1993ல் ஈழநாதத்தில் வெளிவந்த 'மரநாய்கள்' கதையே இவருடைய முதற்கதை. நூலின் கடைசிக் கதை. யாழ்ப்பாணத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒரேகதை இது. பட்டமேற்படிப்புக்காக மலேசியாவில் தங்கியிருந்தவர் தேவமுகுந்தன். மலேசியப் பின்புலத்தில் எழுந்துள்ள கதை இரட்டைக் கோபுரம்.

' எத்தனை மணிக்கு கொழும்பில் பிளைட் லாண்ட் பண்ணும்லா'

'கண்டிக்குப் யார் கூட்டிப்போவாங்கள்லா'

என்று 'லா' போட்டு; முடிக்கும் உரையாடல் மலேசியா. சிங்கப்பூரின் முத்திரை தேவமுகுந்தனும் முத்திரை பதிக்கின்றார்.

மற்ற எட்டுக் கதைகளும் கொழும்பு வாழ்வை மையமாகக் கொண்டவைகள். 1997 ல் தனது இருபதாவது வயதில் மரணித்த அன்புச் சகொதரன் நிர்மலனின் நினைவுகளிற்கு இந்த நூலை அர்ப்பணமும் செய்கின்றார் தேவமுகுந்தன்.

நிர்மலன் என்ற புனைபெயரில் இவருடைய சில சிறுகதைகள் வந்திருக்கின்றன. என் கையில் இவருடைய கண்ணீரினூடே தெரியும் வீதியும் கண்ணீரும் ஆழமான அர்த்தம் கொள்கின்றன. குறைவாக எழுதினாலும் நிறைவான கவனம் பெறும் தெவமகுந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுதி ஆழமான வாசிப்பைக் கோரி நிற்கும் ஒரு அருமையான தொகுதி. இலக்கிய அக்கறை கொண்டவர்கள் வாசிக்கவும் வைத்திருக்கவும் வேண்டிய நூல் 'கண்ணீரினூடே தெரிம் வீதி...'

-தெளிவத்தை ஜோசப்

நன்றி: வீரகேசரி 19.01.2013

Tuesday, January 8, 2013

வெங்கட் சாமிநாதன்


தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்-

தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர்.

ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1948 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன்

அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.

கொழும்புவிலிருந்து அங்கு வாழ நேரிடும் தமிழ்க் குரலை நாம் கேட்டதில்லை. பெரும்பாலும் நமக்குப் பழக்கமானது கனன்று கொதிநிலையிலேயே இருந்த ஈழத்தில் வாழும் தமிழரின் கலகக் குரலைத் தான் கேட்டிருக்கிறோம். கலகக் குரல் ஒற்றைக் குரலாக எங்கும் எதிர் ஒலிக்க நிர்ப்பந்திக்கப் பட்டதையே நாம் ஈழக் குரலாகக் கேட்டும் பழக்கப் பட்டிருக்கிறோம். நிர்ப்பந்திக்கப்பட்டு மௌனமானதை நாம் கேட்டதில்லை. அப்படியும் சில நசுக்கப்பட்ட குரல்களும் நம் காதுகளுக்கெட்டியதுண்டு.

புங்குடு தீவு என்னும் யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவில் வாழ்ந்த மு தளையசிங்கத்தின் சிந்தனையில் ஈழம் ஒரு உருவகப் படிமமாக, தனிவீடு என்ற தலைப்பில் 1962-ல் எழுதப்பட்டு 1980களில் வெளியானது. ஈழம் தந்த எழுத்தாளர் சிந்தனையாளரிலேயே வித்தியாசமான மனிதர். அவர் இறந்தபிறகு தான் அது வெளியானது. தனித்த சுதந்திரக் குரலை விரும்பாத மார்க்ஸிஸம் பேசிய ஈழப் பெருந்தகைகளாலேயே அக்குரல் ஒடுக்கப் பட்டது. சிவரமணி என்று ஒரு கவிக்குரல், தனது 23- வயதில் ஓய்ந்தது. கொலையா தற்கொலையா தெரியாது. இன்னுமொரு குரல் விடுதலைப் போராளிகள் கூட்ட மொன்றிலிருந்து வெளிவந்தது. புதியதொரு உலகம் என்ற ஒரு கற்பனைப் போர்வையில் மறைத்த வரலாறு ஒன்றை எழுதியவரும் ‘கோவிந்தன்’ என்ற புனைபெயரில் மறைந்திருந்த போராளி. இருந்தும் என்ன? புத்தகமே அவர் கொல்லப்பட்ட செய்தியை முன்னுரையில் தாங்கித் தான் வெளிவந்தது. ஒரு கால கட்டத்தில், வட கொரியாவிலிருந்து வந்த கம்யூனிஸ சதிக்கு இலங்கை இரையாகும் கட்டத்தில் மார்க்ஸிஸ பெருந்தகை ஒருவர் “நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் இல்லைங்க. நான் மார்க்ஸிஸம் பற்றி சும்மா பாடம் சொல்லிக் கொடுப்பவன் தான். மற்றபடி அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து தப்பித்துக்கொண்டார் என்று சொல்லப் பட்டது.

எப்போதும் ஒன்றையேவா சொல்லிக்கொண்டிருப்பார்கள்? சமயத்துக்கேற்ப குரல் மாறுவது தானே ஒரு போராளியின் யுத்த தந்திரம்? தப்பித்து உயிர் வாழ்ந்தால் தானே ஐயா பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும்? சும்மா வீராப்பு பேசி உயிர் போனால் பாட்டாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு துரோகம் இழைத்ததாகாதா? இது போன்ற குரல் மாறாட்டங்களும் ஈழ வாழ்க்கையில் நிகழ்ந்த காட்சிகள். அதிகம் பேசப்படாதவை. அதற்கான நியாயங்கள் கைவசம் என்றுமே தயாராக இருப்பவைதான்.

அப்படி உயிர்/சிறை தப்பித்துத் தான் ஈழத் தமிழ் இலக்கியத்தையே பாட்டாளிகளின் வர்க்கக் குரலாக வழிநடத்த முடிந்திருக்கிறது. இது ஒரு கால கட்டம். ஆனாலும் இந்த சீருடை அணிந்து அணிவகுப்பில் சேர மறுத்த ஒருசிலரும் உண்டு. அவர்கள் எஸ் பொன்னுத்துரை, மு தளையசிங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக வெளித்தெரியாது போனவர்கள். உதாரணமாக ரஞ்சகுமார் என்னும் பெயரை எத்தனை பேருக்குத் தெரியும். குந்தவை என்ற பெண் எழுத்தாளரை எத்தனை பேர் அறிவார்கள்? பெருந்தகை அருள்பாளித்து வளர்த்த மடத்தின் குட்டித் தம்பிரான்களை, அவர்கள் குரல் தணிந்துவிட்டாலும் தமிழ் கூறு நல்லுகம் இங்கும் இலங்கையிலும் புலம்பெயர்ந்தோரிடத்திலும் அறியும்.

“அவர் தானே எங்களைப் பற்றி எழுதினார். வேறே யார் எழுதினாங்க?” என்பது கைவசம் உள்ள நியாயங்களில் ஒன்று.

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து வருவதற்குக் காரணங்கள் பல. ஈழத்திலிருந்து லக்ஷக் கணக்கில் தமிழர்கள் வெளியேறத் தொடங்கியதும் தம்மிடம் தஞ்சம் அடைந்தவருக்கே ஆசி அருளிய முற்போக்கு மடத் தலைவர் மறைந்ததும் மடம் காலியாகத் தொடங்கியதும்.

இது விடுதலைப் போராட்டமும், முற்போக்குச் சீருடையும் மறைந்து விட்ட காலம். தமிழரின் வாழும் மண்ணின் தமிழ் அடையாளங்களையே அழிக்க அரசு முற்படும்போது வாழ்க்கையின் சித்திரமே வேறாகித் தான் போகிறது.

அந்தச் சித்திரம் தான் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் எழுத்துக்களில், நமக்குத் தெரிகிறது. இது கொழும்புவில் வாழும் தமிழனின் வாழ்க்கைச் சித்திரம். யாழ்ப்பாணத்தில், அம்பாரையில், மட்டக்களப்பில், மலையகத்தில் தமிழ் வாழ்க்கை வேறாகத்தான் இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக கிளிநொச்சியில் வவுனியாவில் வாழும் தமிழரின் வாழ்க்கை முற்றிலும் அன்னியப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அங்கிருந்து எழுதுபவரகள் யாரும் இருப்பார்களா என்பதும் தெரியாது.

இவ்வளவையும் எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், இந்த கதைகளின் குரல் நாம் இதுகாறும் கேட்காத ஒரு குரல். ஒரு புதிய குரல்.

முதன் முறையாக, வழிகாட்டும் முற்போக்குப் பெருந்தகை இல்லாது, இந்தத் தலைமுறையில் வித்தியாசமான சரித்திர கால கட்டத்தில் எழுத வந்துள்ள தேவமுகுந்தன் முதலில் எழுதத் தொடங்கியது, மாணவனாக 1992-ல் மரநாய்கள். ”என்னைப் பாதித்த உணர்வுகளையும் அனுபவங்களையும் தான் எழுதுகிறேன்.” என்று சொல்லும் குரல் புதிய குரல். கட்டாயம் அது இத்தொகுப்பில் உள்ள கதைகளில் சாட்சியம் பெறுகிறது. மரநாய்கள் ஒரு சிறுவனாக, யாழ்ப்பாண கிராமம் ஒன்றில் ராணுவம் முகாமிட்டிருக்கும் சூழலில் ராணுவ கண்காணிப்பில் பயந்து வாய் மூடி வாழும் கட்டம். சுற்றி எங்கும் வீடுகள் இடிந்தும் தரைமட்டமாகியும், கிடக்க கிராமம் திரும்பிய மக்கள் வாழ்க்கையைத் திரும்பத் தொடங்குகின்றனர். ராணுவம் எதையும் அபகரித்துச் செல்லும். கோழிப் பண்ணைகள் குறைந்த விலைக்கு கோழிகளை விற்றுவிட்டு கடை மூடுகின்றனர். அம்மா குறைந்த விலைக்கு ஒரு கோழி வாங்கி வருகிறாள். அதை மரநாய்களிடமிருந்த காப்பாற்றப் படும் பாட்டிற்கு இடையே ராணுவம் பறித்துச் செல்கிறது. வாய் மூடிப் பார்த்திருக்கத் தான் முடிகிறது. ஆனால் சிறுவன் தன் அண்ணனிடம் இதைச் சொல்ல, அண்ணன் சொல்கிறான் “மர நாய்களைத் துரத்த வேண்டும்” என்று.

இது 1992-ன் முதல் கதை. அப்போதைய இடமும் வேறு. சூழலும் வேறு. பத்து வருடங்களுக்குப் பின் தான் அடுத்த கதை கொழும்புவிலிருந்து எழுதப் படுகிறது. இது வேறு சூழல். அடக்கு முறைதான் பின்னும். ஆனால் சூழல் வேறு. அடக்கும் சக்திகள் வேறு.

அப்பா கனடாவில் இருக்கிறார். மகன் இப்போது இருப்பது கொழும்புவில். கனடாவிலிருந்து கொழும்புவிற்கு பணம் அனுப்புவதில் அதிக தொந்திரவு இருப்பதில்லை. ஆனால் கொழும்புவிலிருந்து கிளிநொச்சியில் இருக்கும் அம்மாவுக்கு பணம் அனுப்புவது தான் ஆயிரம் சந்தேகங்களுக்கு வழி வகுக்கும். கிளிநொச்சி என்ற பெயரைப் படித்ததுமே, விசாரணை தொடங்கும். இது யார், எங்கிருந்து இவ்வளவு பணம், இன்று வரை எவ்வளவு பணம் அனுப்பியிருக்கிறாய், உன் அடையாள அட்டை, போலீஸ் பதிவு, வேலை செய்யும் பல்கலைக் கழகப் பதிவு, எங்கே? என்று இவ்வளவும் ஒவ்வொரு தடவையும் விசாரணை நடக்கும். சூழ்ந்திருப்போர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும். கிளிநொச்சியிலிருந்து வரும் கடிதம், அங்கு போகும் கடிதம் எல்லாம் தணிக்கை செய்யப் படும். கொழும்புவில் வேலையில்லாது தனித்திருக்கும் தமிழனுக்கு இருக்க இடம் கிடைக்காது. தமிழர்களே வீடு கொடுக்க மாட்டார்கள். பொய் சொல்லவும் முடியாது. அலுவலக நேரம் பூராவும் வெளியே சுற்ற வேண்டும், அந்தப் பொய்யை நிஜம் என நிரூபிக்க.

இன்னொரு கதையில் (இடைவெளி) குழந்தைக்கு உடல் நலமில்லை என்று விடுமுறையில் இருந்தால், அப்போது கொழும்புவில் எங்கோ ஒரு இடத்தில் குண்டு வெடி சம்பவம் நடந்தால், விடுமுறை எடுத்தவன் பேரில் சந்தேகம் எழுகிறது. நேற்றுவரை சினேகத்துடன் பழகியவர்களால் இன்று பயங்கர வாதி என்று ஒதுக்கப் படுகிறான். தன்னை ஒதுக்கி, மற்றவர்கள் கூடிக் கூடி இரகசிய குரலில் தன்னை சைகை காட்டி பேசுகிறார்கள். போலீசுக்கும் தகவல் போகிறது. இரண்டு போலீஸ் காரர்கள் வந்து இவனை இழுத்துச் செல்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் எதையும் காணாதது போல் முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். இது 2010 கொழும்பு அலுவலகச் சூழல்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவது என்பது ஒரு கொடுமை. அது தமிழன் என்ற காரணத்தாலேயே எப்போதும் வேறு எக்காரணமின்றியும் நிகழும். பின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. சிறை சென்று சித்திர வதைப்பட்டு மீண்ட பிறகும் சிங்கள நண்பர்களால் மட்டுமல்ல, தமிழர்களே கூட தாங்கள் பயமின்றி வாழும் நிர்ப்பந்தத்தில் நிராகரிக்கத் தொடங்கு கிறார்கள்.

”சிவா” என்னும் கதையில் சிவா சிறையிலிருந்து விடுதலை பெறுவது அதிக காலம் நீடிப்பதில்லை. எங்கும் சந்தேகக் கண்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுக்கும் கண்கள். காட்டிக்கொடுக்கும் கண்கள். பின்னும் சிறை. கொழும்புவில் ஒர் அறையில் வாடகைக்கு இருந்து கொண்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவனின் சுதந்திர தினம் கழிவது பயத்திலும் பட்டினியிலும் தான். உணவருந்தச் செல்லும் வழியில் சோதனை, சிங்களம் பேசும் தொனியிலிருந்தே தமிழன் என்று கண்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். சாப்பிடச் செல்லும் உணவகம் மூடப்பட்டிருக்கிறது. வேலைசெய்யும் மலையகத் தமிழர்கள் தம் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளாததால் கைது செய்யப்பட்டு கடை மூடப்படுகிறது. இனி வேறு எங்கும் சென்றலைந்தால் மறுபடியும் சோதனை விசாரணை என்று எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அறைக்குத் திரும்புகிறான். சிங்களவர் மத்தியில் தமிழனாக வாழ்வதே சந்தேகத்திற்கு ஆட்பட்டு அன்னியனாகவே பயந்தே வாழவேண்டியிருக்கிறது (சுதந்திர தினம்) இது ஒரு நாள் அவதி இல்லை. கொஞ்ச நேர கொஞ்ச நாள் சந்தேகம் அல்ல. வாழ்நாள் முழுதும் கறைபடிந்து அவதி தரும் சந்தேகம்.

தனி வீடு என்று தனி ஈழம் பற்றிய கனவில் மு தளைய சிங்கம் நாவல் எழுதிய 1960-களிலும் அருள் சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது வந்துவிட்டது எழுதிய காலத்திலும், ஒற்றுமையுடன், சினேகபாவத்துடனும் வாழ்ந்த சிங்கள-தமிழ்க் குடும்பங்களைப் பார்க்க முடிந்திருக்கிறது. சிங்கள் மேலாதிக்க மனப்பான்மைக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கள எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூட காண முடிந்திருக்கிறது. சோ. பத்மநாதன் மொழிபெயர்த்துத் தந்துள்ள (தென்னிலங்கை கவிதைகள்} என்னும் கவிதைத் தொகுப்பில். ஆனால் ஈழத் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களே, பல குழுக்களாகப் பிரிந்து பகைமை பாராட்டும் விடுதலைப் போராளிகளிடமிருந்தே உயிருக்கு பயந்து வாழ்ந்த கால கட்டத்தை பேசும் எழுத்துக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளன கனடா வாழும் செழியனின் வானத்தைப் பிளந்த கதை அவற்றில் ஒன்று.

தம்பி விடுதலைப் போராளிகளோடு சேர்ந்துவிட்டான். சேர்ந்தானா சேர்க்கப் பட்டானா தெரியாது. அண்ணன் கொழும்புவில் ஒரு வாடகை அறையில். பல்கலைக் கழக மாணவன். தம்பி இயக்கத்தில் சேர்ந்ததால் வேளை கெட்ட வேளையில் கதவு தட்டப்பட்டால் போலீஸோ விசாரணையோ என்ற பயம். கதவு தட்டப்படுகிறது காலை ஐந்து மணிக்கு. பயந்து பயந்து கதவைத் திறந்தால் வந்திருப்பது அறை நண்பன். உள்ளே வந்து, ’வெள்ளவத்தைக்கு உடனே போகணும் கிளம்பு,’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்று, “அப்பாவுக்கு டெலிபோன் பண்ணு உடனே” என்கிறான். டெலிபோனில் அப்பா அழுது கொண்டே சொல்லும் செய்தி தம்பி நகுலன் செத்துட்டான். பெரியாஸ்பத்திரியில் உடல் கிடக்கும்” என்கிறார். உடல் ஆஸ்பத்திரியில் இங்கு கிடக்க, கிளிநொச்சியில் செத்த வீடு சடங்குகள் நடக்கும். (கண்ணீரினூடே வீதி)

இது கொழும்புவில். மலேசியா போனாலும் எத்தகைய சினேகங்களினூடேயும் தமிழனை வெறுக்கும் சிங்கள வெறி உடன் செல்லும். பல சிங்கள தமிழ் நண்பர்களிடையே நட்பில் திளைத்திருக்கும் சுனில் என்னும் சிங்களன். அவனது குடும்பம் கண்டியில். சுனிலின் குழந்தை பிறந்த சில நாளில் இறந்துவிட்ட செய்தியை முரளி சொல்கிறான். அவர்களுடன் நெருங்கிப் பழகும் சுப்பிரமணியம் என்னும் மூத்தவயதினர் தம் காரில் அவர்களை விமான நிலயத்துக்கு கொண்டு சேர்த்து தாமே கொழும்புவுக்கு விமான டிக்கட்டும் வாங்கிக்கொடுக்கிறார். விமான நிலையத்தில் செய்தி சொல்லப்படுகிறது. கொழும்பு விமான நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதால் கொழும்புக்குச் செல்லும் அனைத்து விமான பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதைக் கேட்டதும் சுனிலிடமிருந்து உடன் வெளிப்பட்ட வார்த்தைகள், “பறத் தெமிளு”. என்ன சொல்றான்? என்று சுப்பிரமணியம் (மலேசியத் தமிழர்), முரளி தனக்கு சிங்களம் குறைவாகத் தான் தெரியும் என்று. சொல்லி மறைத்து விடுகிறான்.

இத்தொகுப்பில் அதிகம் கதைகள் இல்லை. இரண்டு மூன்று கதைகள் அங்குள்ள பல்கலைக் கழக கல்வியாளர் போடும் அதிகாரப் போட்டியும் சலுகைகளுக்கான ஆசையும், உத்யோக வேட்டையும், தனக்கே தானே ஏற்பாடு செய்து கொள்ளும் பாராட்டு விழாக்களும் இலங்கைத் தமிழரை மாத்திரமே அடையாளம் காட்டுவனவல்ல. இங்கும், நம்மிடையேயும் அதிக அளவில் அவர்கள் உண்டு. இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வின் அவலத்திடை யேயும் அவர்கள் இருப்பார்கள் தான். மனித சமூகம் எல்லா வகையினரையும் கொண்டது தானே. அவற்றில் பரிகாசத்தைச் சொல்வதை விட கோபத்தையே அதிகம் காண்கிறோம்.

இருப்பினும், கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பில் தேவமுகுந்தன் தன் அனுபவங்களையே உணர்வுகளையே எழுதியுள்ளது வித்தியாசமான ஒரு எழுத்தை அங்கிருந்து வந்துள்ளதைச் சொல்கிறது. பிரசாரத்தை எழுதி வந்த காலம் போய் பட்ட அனுபவங்களை உள்ளான அவதிகளைச் சொல்லும் எழுத்து வரத் தொடங்கியுள்ளது.

இதற்கு பின்னுரை எழுதியுள்ள பேராசிரியர் எம் ஏ நுஹ்மான் அவர்கள், இது தமிழர் தரப்பை மட்டும் தான் சொல்கிறது. அது உண்மையே யானாலும் சிங்களவர் தரப்பையும் சொல்வதுதான் முழுமையாகும். தமிழ் வெறி சிங்கள வெறியையும் சிங்கள வெறி தமிழ் வெறியையும் பிறப்பித்துள்ளது என்று சொல்கிறார். இப்படியும் ஒரு பார்வை இருக்கத் தான் செய்கிறது.

கண்ணீரினூடே தெரியும் வீதி: (சிறுகதைத் தொகுப்பு) தேவ முகுந்தன்: வெளியீடு: காலச் சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில், 629001 விலை ரூ. 75

நன்றி : கணையாழி ஜனவரி 2013

Saturday, January 5, 2013

ஸபீர் ஹாபிஸ்


தேவமுகுந்தனின் கதைகள் - ஓர் அனுபவப் பகிர்வு

கதை சொல்லப்படும் விதம், கதையின் கருப்பொருள் ஆகிய இரண்டையுமே ஒரு சிறுகதையை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சங்களாக நான் கருதுகிறேன். கரு எதுவுமின்றியே கதையைச் சொல்லிவிட முடியும் என்றும், தனியொரு கருவை மாத்திரம் ஒரு சிறுகதை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அண்மைக்காலங்களில் முயற்சிக்கப்பட்டு வரும் நவீன பரீட்சார்த்தங்களுக்கு மத்தியிலும், சிறுகதையில் மையப்புள்ளியான கருவொன்றின் அவசியத்தை வலியுறுத்தும் போக்கு தொடர்ந்தும் இருந்து வரவே செய்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், 'உமா வரதராஜன்' கதைகளை முழுமையாகப் படித்து முடித்த பிறகு, அண்மையில், முழுமையாக ஒரே மூச்சில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுதி 'கண்ணீரினூடே தெரியும் வீதி'. தேவமுகுந்தனின் எழுத்துகள் ஊளைச்சதைகள் எதுவுமற்ற கம்பீரமும் ஆரோக்கியமும் நிறைந்த கட்டுக்கோப்பான ஒரு தேகமாய் என்னை வசீகரித்தன.

எவ்விதமான பகட்டும் ஆர்ப்பாட்டமுமின்றி, வெகு இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் நேர்த்தி இத்தொகுதிக்கு வலுச் சேர்க்கும் முக்கிய பண்பொன்றாகும். கருப்பொருள் எவ்வளவுக்கெவ்வளவு எழுத்தாளனின் வாழ்வோடு நெருக்கமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அக்கதையின் அழகியல் உச்சம் பெறும் என்பதை மிக அழுத்தமாக தேவமுகுந்தன் இக்கதைகளில் நிரூபித்திருக்கிறார். அவரது அனுபவங்களே இக்கதைகளை இலக்கியத்தரத்துடன் மிகக் கவனமாகச் செதுக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கக் கூடும். வடித்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களும் யதார்த்த இயல்பு சற்றும் மாறாத எளிய நடையும் ஆணி அறைந்தாற் போல் இழுத்து நிறுத்தி முற்றுப்புள்ளியிடும் ஆளுமையும் இணைந்து தேவமுகுந்தனின் கதைகளை இலக்கிய உச்சிக்கு அழைத்துச் செல்ல முயல்கின்றன.

தொகுதியில் இடம்பிடித்துள்ள பத்துக் கதைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது எல்லாக் கதைகளிலும் இழையோடும் மென்மையானதொரு சோகமாகும். இச்சோகத்தின் கர்த்தாக்கள் மொழியாலும், இனத்தாலும், பிரதேசத்தாலும் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் பாதிப்புகளோ எவ்வித வேறுபாடும் பாராது எல்லோரையும் வஞ்சமின்றி அரவணைத்துச் செல்கின்றன.

குறிப்பாக, சிங்கள மேலாதிக்கத்தின் பெறுபேறாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டு விட்ட அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் துன்பியலை மிக யதார்த்தமாக விபரிக்கும் பெரும்பாலான கதைகள், படிப்பவர் நெஞ்சங்களிலும் அத்துன்பியலின் வலியைச் செருகி அனுதாபத்தை வரவழைத்து விடுவதை அக்கதைகளின் பாரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

இக்கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் முடிவுமாகும். குறிப்பாக கதைகளின் முடிவுகள் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 'இடைவெளி', 'சிவா', 'சின்ன மாமா', 'ஒரு சுதந்திர நாள்', 'இவன்' ஆகிய கதைகளின் அற்புதமான, நகைச்சுவையான, கிண்டலான முடிவுகள் மிகவும் கவர்ச்சி மிக்கவை. வேறு எந்த முடிவும் இவற்றை விடச் சிறந்தாக அமைந்திருக்க முடியாது. அநாவசியமான வார்த்தையொன்றையேனும் செயற்கையாக இடாது மிக யதார்த்தபூர்வமாகவும் வலிமையாகவும் தேவமுகுந்தன் இச்சிறுகதைகளை வடிவமைத்துள்ளார்.

கதைகளின் இலக்கியத்தரத்தை விடுத்து, கருப்பொருளை நோக்குகையில் பின்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கருத்துகளை நாம் வழிமொழிய வேண்டியுள்ளது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் போர்ச்சூழலை பக்கச்சார்புடனேயே பார்த்துப் பார்த்துப் பொரிந்து தள்ளியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு தேவமுகுந்தனும் விதிவிலக்காகவில்லை.

பேராசிரியர் நுஃமான் அவர்களின் கருத்தை மறுத்துரைக்கும் உமா வரதராஜன் அவர்கள், தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல, அவர் சூழலால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியர் என்றும், உரத்த குரலில் இல்லா விட்டாலும் ஒரு சிறு முனகல் தொனியிலாவது தன் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், கதைகளில் குறிப்பிடப்படும், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளும் நெருக்குதல்களும் உண்மையில் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் எதிர்வினைகளே என்பதையும், சிங்கள மேலாதிக்கத்தைப் போன்று விடுதலைப் போராட்டங்களின் மூலமும் தமிழ் மக்கள் அதிக இழப்புகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர் என்பதையும் தேவமுகுந்தன் தனது எந்தக் கதைகளிலும் குறிப்பிட விரும்பவில்லை என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, தான் ஒரு குறித்த சமுதாயத்தின் உறுப்பினனாயினும் பொதுவான மானுட நேயனும் கூட என்பதை, தனது 'கண்ணீரினூடே தெரியும் வீதி...' கதையினூடாக தேவமுகுந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் இடம்பெறும் இரு கதைகளைப் படித்த போது, அவை உமா வரதராஜன் அவர்களின் இரு கதைகளுடன் ஒத்த இயல்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு தனியார் வர்த்தக நிறுவனத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் முகாமையாளரொருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களை விமர்சனத்துடன் விபரிக்கும் 'உயர', மற்றும் நூல் வெளியீட்டு விழாவொன்றில் அகப்பட்டு அங்கு இடம்பெறும் முதுகு சொறிதல்களைப் பார்த்து எரிச்சலுற்று உள்ளுக்குள் குமுறுகின்ற மற்றோர் எழுத்தாளனின் அனுபவத்தைப் பதிவு செய்யும் 'சின்னஞ்சிறகுகள்' ஆகிய உமா வரதராஜனின் இரு சிறுகதைகளின் இயல்பும் நடையும், தேவமுகுந்தனின் 'வழிகாட்டிகள்' மற்றும் 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளிலும் பெரிய மாற்றங்களெவையுமின்றி தெரிகின்றன. அரச திணைக்களத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களைக் கண்டு சினமுற்று உள்ளுக்குள் குமுறுவதைக் கூறும் 'வழிகாட்டிகள்' கதையும், பாடசாலையொன்றுக்கான நிதி சேர்ப்புக்காக அதன் பழைய மாணவர்கள் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்
டலில் டின்னர் டான்ஸ் ஒழுங்கு செய்து கூத்தடிப்பதைச் சொல்லும் 'கூட்டத்தில் ஒருவன்' கதையும் தேவமுகுந்தனுடையவை. இக்கதைகளில் களங்கள் வேறுபட்டிருந்தாலும் கதை சொல்லப்படும் பாணியும் நடையும் உமா வரதராஜனின் அவ்விரு கதைகளுடனும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. சிறந்த சிறுகதையொன்றைப் படிக்கையில் ஏற்படும் இயல்பான தாக்கம், சிலவேளைகளில் அதுபோன்றதொரு கதையை எழுதிப் பார்க்க சாமான்ய எழுத்தாளர்களைத் தூண்டுவது இயற்கையானதே. உமா வரதராஜனின் 'அரசனின் வருகை' கதையின் பாதிப்பினால், ஓட்டமாவடி அறபாத்தின் 'அரசி' கதை உருவானதும் இதுபோன்றதுதான். இதனை, பிந்திய எழுத்தாளர்களின் தோல்வி என்பதை விட, முந்திய எழுத்தாளனின் வெற்றி என்று கூறுவதே பொருத்தம் என்பது எனதெண்ணம்.

நல்ல எழுத்தாளர்கள் பலரின் சில கதைகள் இன்னும் கூட இறவாதிருப்பதில் அவர்கள் துணிந்து முயற்சித்த புதிய உத்திகளுக்குப் பெரும் பங்கிருக்கின்றது. தேவமுகுந்தனின் கதைகளுக்கு அழகிய, அப்பழுக்கற்ற எளிய நடையொன்று இலாவகமாக வாய்த்துள்ள போதிலும், புதிய உத்திகளைப் பிரயோகிப்பதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளாதது ஒரு குறையாகவே தோன்றுகின்றது. சின்ன மாமா கதை இக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்வதாக ஆறுதல்பட்டுக் கொள்ளவும் முடியும்.

தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று 'இவன்'. டி.ராஜேந்தரின் அக்கால சென்டிமென்ட் சினிமாவொன்றைப் பார்த்த சுகமான சோக அனுபவத்தை இக்கதை வழங்குகின்றது. சுய அனுபவச் சாயல் மிகத் தூக்கலாகத் தெரிவதாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் குறிப்பிட்டுள்ள இந்த நல்ல கதையைப் படித்து முடித்த போது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

'நான் எல்லாவற்றையும் கற்றேன். ஆனால் முதற்தர மாணவன் ஆகவில்லை. இன்று, சிறந்த பல்கலைக்கழகங்களின் முதற்தர மாணவர்கள் பலர் எனது வேலையாட்கள். எனவே, ஆக்கபூர்வமான மனிதனாக இருங்கள்'

ஸபீர் ஹாபிஸ்

Friday, January 4, 2013

வாகரை வாணன்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கி வரலாற்றைப் படிப்பவர்கள் மனதில் இலக்கிய மேதைகள் இருவர் உடனடியாக இடம்பிடித்துக் கொள்வார்கள். அவ்விரு மேதைகளில் ஒருவர் மகாகவி பாரதி (1882-1921) மற்றவர் சிறுகதை மன்னன் என்று சிறப்பித்தப் பேசப்படும் விருத்தாசலம் புதுமைப்பித்தன் (1906-1948).

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றையுடைய தமிழ்க் கவிதையைப் புதியதொர் பாதையில் இட்டுச் சென்ற பெரும்புலவன் பாரதி. தமிழ்க்கவிதை இன்று அவன் வகுத்த வழியிலேயே நடந்து தடையின்றி செல்லுதல் அவனது கவிதா சக்திக்குக் கிடைத்த முழுமையான அங்கிகாரத்ததைக் காட்டும். ஆனால் புதுமைப்பித்தன் நிலையோ வேறு. ஏனெனில் அவன் காலத்தில் தமிழ்ச் சிறுகதையின் வரலாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளையே எட்டியிருந்தது.சிறுகதையென்ற இலக்கியப் பயிரை வளர்த்தெடுத்தவர்களில் மகாகவி பாரதியாரும் வ.வே.சு. ஐயரும் முக்கியமானவர்கள். எனினும் சிறுகதைப் பயிருக்கு பலமான அத்திபாரத்தை இட்ட பெருமை புதுமைப்பித்தனுக்கே உண்டு. இதன் காரணமாகத்தான் புதுமைப்பித்தனை தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று டாக்டர் மு.வ. போற்றுவார்.(தமிழ் இலக்கிய வரலாறு பக்கம் 299).

புதுமைப்பித்தன் தான் வாழ்ந்த காலத்துச் சமூகத்தை தனது எழுத்தக்களால் சத்திரசிகிச்சைக்குட்படுத்தியவன். அவனின் இந்தப் போர்க்கோலத்தை சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் சமூக விமரிசனத்தையே தனத உயிராகக் கொண்டிரந்தார் என்பார். ( ஆ.இரா. வெங்கடாசபதியின் புதுமைப்பித்தன் கதைகள் பக்கம்- 33). புதுமைப்பித்தன் தனது சமூகத்தை சத்திரசிகிச்சைக்குட்படத்ப் பயன்படுத்திய எழுத்து நடை சுயமானது.( saga city) எனச்சொல்லலாம்.

'கண்ணீரிரினூடே தெரியும் விதி...' என்ற தலைப்பில் தேவமகுந்தன் எழதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் வழகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகளைப் படிப்பவர்கள் அவற்றில் புதுமைப்பித்தனின் வாசத்தை நுகரவே செய்வர். 'இவன்' என்ற கதையில் அந்தவாசம் இப்படி வீசுகின்றது. இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள்.

செய்யுள்களிலும் கவிதைகளிலும் பயன்படுத்ப்படும் அணிவகைகளை உரைநடையிலும் சிறுப்பாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு 'மரநாய்கள்' எனும் கதைத்தலைப்பே போதுமானது. இத.தலைப்பு இராணுவதடதையெ உருவகப்படத்தகின்றமையை கதையின் முடிவில் சொல்லப்படும் ' மரநாய்களை துரத்த வேண்டும்'என்னும் வசனம் உணர்த்தும். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்திற்கும் அவர்களின் வாழ்க்கைக்குமிடையே பெரிய இடைவெளி இருப்பதண்டு. புரட்சி, புதுமை என்றெல்லாம் மேடைகளில் முழங்கிவிட்டு வீட்டில் இருந்து நல்லநாள் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். தேவமகுந்தனின் 'சின்ன மாமா'வும் அப்படிப்பட்டவர்தான் என்பதைக் கதை சொல்கின்றது.

'சின்ன மாமா' கதையின் கரு எப்படிப்பட்டதாயினும் அது புனையப்பட்ட விதம் ரசிக்கத்தக்கது. எழுத்தாளன் கடல் கொண்டான் பேசும் வீரவசனங்களை கதையின் இடையிடையே இணைத்துள்ளமை கதைக்கு பொலிவையும் அழகையும் தருகின்றது. 'இவன்' என்னும் கதை நன்கு படித்துவிட்டு வேலையின்றி அலையும் ஓர் இளைஞனைப் பற்றியது. படித்தால் மட்டும் போதுமா? கையிலும் பையிலும் நிறைய இருந்தால்தான் ஒருவேலைபை; பெற்றுக் கொள்ளமுடியும் என்னும் உண்மை கதையின் தொக்குபொருளாக உள்ளது. பாவம் அந்த படித்த இளைஞன் கடைசியில் அவனுக்கு பைத்தியம் என்ற பட்டமும் சூட்டப்படகின்றது.

ஆரவாரமிக்க கொழும்பு மாநகரச் சூழலில் வாழ்ந்து கொண்ட நமது இளம் எழுத்தாளர்கள் தாம் எழதிய கதைகளின் ஊடாக தமது பிறந்த மண்ணையும் கல்வி கற்ற கல்லூரியையும் பார்ப்பது அவற்றின் மீது அவருக்குள்ள பற்றையே புலப்படுத்தும். இதைத்தான் தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்று சொல்வார்கள் போலும். தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், ஒரு சுதந்திர நாள், மரநாய்கள் என்னும் கதைகள் போர்க்காலத்தில் தமிழர்கள் எத்தகைய பொறிக்குள் அகப்பட்டிருந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். எப்படித்தான் தமிழர் அந்நியரோடு நெரங்கிப் பழகினாலும் கடைசி நேரத்தில் காலைவாரி விடு வார்கள் என்பதற்கு இரட்டைக் கோபுரத்தில் வரும் 'பறதெமிழ' என்னும் இரண்டு சிங்களச் சொற்களெ போதும்.

போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் 'நகுலன்'களின் பிரேதங்களை வைத்தியசாலைகளிலும், காணாமல் போன 'சிவா'க்களின் புகைப்படங்களைத் தாங்கியவாறு தாய்மார் கண்ணீரும் கம்பலையுமாக விதிகளில் அர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் காணும்பொது தமிழரின் அவலம் ஒர பெரிய தொடர்கதை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இத்தகு உணர்வுகைளை தேவமுகுந்தனின் கதைகளில் காண்கையில் அவற்றில் பயன்பட்டுள்ள பிரதேசச் சொற்கள, பிறமொழிச் சொற்கள் பற்றி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடதல் பொருத்தமாகும்.

இன்றைய நவீன இலக்கியங்களான புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என்பவற்றில் பிரதெசச் சொற்கள் (dialects) பிறமொழிச் சொற்கள் கலத்தல் தவிர்க்க முடியாத என்பது உண்மைதான். மகாகவி பாரதி கூட காணி நிலம் வேணும், பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே என்று பாடியதை நாம் மறப்பதற்கில்லை. எனினும் அத்தகைய சொற்களின் தேவை, மக்கியத்துவம் கருதியே எழுத்தாளர் தாம்படைக்கும் இலக்கியங்களில் பயன்படத்தவது தக்கது. அப்பொதுதான் தமிழின் அழகும் அதன் தனித்தன்மையும் பாதகாக்கப்படும். நவீனம் என்பதற்காக தமிழ் தமிழ்நலிந்துபோக விடலாமா?

தெவமுகுந்தனின் கதைகள் அனைத்துமே அவன் தான் வாழும் சமூகத்தைக் கூர்ந்து பார்க்கும் ஒரு படைப்பாளி என்பதை நிரூபிக்கும். இதுவே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மதலான எழுத்தாளர்களின் இலட்சணமுமாகும் என்பதை எண்ணும்பொது நமது இளம் எழுத்தாளரின் எதிர்கால எழுத்துலகம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடிகின்றது. தேவமுகுந்தன் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு பெருந்திரு என்பது மிகையான கூற்று அல்ல.

வாகரை வாணன்

நன்றி: ஞாயிறு தினக்குரல் 28.10.2012

Thursday, January 3, 2013

சமரசன் ( மா.பா.சி)


கண்ணீரினூடே தெரியும் வீதி- தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு

புனைவிலக்கய உலகின் கவனத்ததைப் பெற்றுள்ள இளம் எழுத்தாளர் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதைத் தொகுப்பை தமிழக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் பத்துச் சிறுகதைகள் அடங்குகின்றன.

இவை தினக்குரல், கலைமுகம், யுகமாயினி, காலம், ஞானம், ஈழநாதம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவையாகும். ஈழத்துப் போர்க்காலச் சூழல், சமகாலத்துத் தமிழ் வாழ்வின் சீர்கேடுகள், அரச பணியாளரின் பொதுசனத்தை ஏமாற்றும் பம்மாத்துக்கள் என்பன கதைகளில் தீட்சண்யமான பார்வையோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. சிலவற்றில் போரின் விதைப்புகளை சிங்களச் சூழலிலும் மலேசியப் பிரதேசத்திலும் வைத்துச் சொல்லியிருப்பது அவற்றுக்கு சிறப்புப் பெறுமானத்தை ஏற்படுத்துகின்றது.ஐ.சாந்தன் போன்ற சில ஈழத்துக் கலைஞர்கள் தேசிய இலக்கிய முன்னெடுப்பில் ஏற்கனவே இத்தகைய புனைகதைகளை ஆக்கியுமிருப்பதை வாசகர்கள் மறந்திருக் மாட்டார்கள். ஆனால் அவைகளுக்கு சற்று எதிர்வினையாக தமிழிய உணர்வு இத்தொகுப்பாசிரியர் தேவமகுந்தனின் சிறுகதைகளில் வேரோடியுள்ளதை ஆழந்த வாசிப்பு உணர்த்தும்.

மாணவருக்கு இலவசப் பாடநூல் வெளியீடு சம்பந்தமான அதிகாரிகள் மாநாடு பற்றிய சிறுகதை வழிகாட்டிகள் இலவசக் கல்விக்கு மறைகாலம் நெருங்கிவிட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த இலவசப்பாடநூல் வழங்களுக்கு எப்போது கோவிந்தாவோ யாமறியோம். கல்வியதிகாரிகளின் இந்த மாநாடுகள் அவர்களின் வர்க்க நலன்களைப் பெசுவதற்காகன ஒன்றுகூடல்னெ;பதை சாதாரண வாசகனும் உணரக் கூடியதாக இக்கதை தத்ரூபமாகப் புனையப்பட்டுள்ளது.

இந்த மண்ணில் வாழ்ந்து நிலைமைகளை அறிந்தவர்களைக் காட்டிலும் புகலிடத்தில் வாழும் மூர்த்திகள் வழிபடத்தக்கவர்கள் தானென்பதை கூட்டத்தில் ஒருவன் கதை சிந்திக்க வைக்கின்றது.

கற்று மேலோங்க வைத்த கல்லூரியில் போஷாக்கின்மையால் மாணவர்கள் மயங்கி விழுவதாகவும் அவர்களுக்கு போஷாக்கான உணவளிக்க நிதிகோரி கல்லூரி அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு ஈமெயில் தகவல் கொடுக்கின்றார். இதை ஆலோசிப்பதற்கு கிறிஸ்மஸ் சூழலில் ஆங்கிலேயன் இன்னும் எம்மோடு இருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆடம்பர ஐந்து நட்சத்திரவிடுதியொன்றில் பழைய மாணவரின் ஒன்றுகூடல் ஏற்படுத்ப்படுகின்றது. விலையர்ந்த மதுபானங்கள் பரிமாறப்பட்டு பட்டினிச்சாவை எதிர்நோக்கும் மாணவருக்கு ரூபா 1300ஃஸ்ரீ க்கான காசோலையை அனுப்பத் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படியிருக்கும் சொந்த மண்ணில் வாழ்பவனின் கரிசனை? எனவேதான் சொன்னோம் புகலிட மூர்த்திகள் வழிபாட்டுக்குரியவர்களென.

வேலையற்ற பட்டதாரிnhருவன் வாழும் சூழலைக்கணிப்பிடும் விதத்தை 'இவன்' சித்தரிக்கின்றது. சின்னமாமா என்றசிறுகiதில் சின்ன என்ற சொல்லை மேல் குறியிட்டு மாமா சின்னத்தனங்களின் களஞ்சியம் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் நால்வரே காணப்பட்டதாக சிறுகiதில் பதிவுண்டு. தமிழருக்கு நால்வர் முக்கியமானவவர்கள்.அத்தூண்டுதலால் போலும் துயர் பகிர்தல் நிகம்வு நடத்தப்பட்டது. இது போன்ற சிறுகதைகள் இலக்கு வைக்கப்படும் எழுத்தாளர் வாழும்போதே வெளியாக வெண்டும். அது குற்றம் புரிந்த எழுத்தாளருக்கு எச்சரிக்கையாக இருக்கும். காலமான பின் வாசிக்கக் கிடைத்தால் வாழும் எழுத்தாளரை வாசகர்கள் மத்தியில் மதிப்பிறக்கம் செய்ய முயல்வார். படைப்பின் சமூகப்பயன்பாடே முக்கிமானது. இச்சிறுகதை மிகச் கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ளது.;

இததொகுப்பின் ஏனைய சிறுகதைகள் போர்க்காலச் சிறுகதைகள். இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் சுதந்திரம் பெற்றதன் உழைப்பகை; கொடுத்த தமிழர்கள் சேர் பொன் இராமநாதனின் உருசச் சிலைக்கு மலர் வளையம் வைத்து அதற்கு மாலையணிந்து கௌரவிப்பார்கள். இது கடந்த 64 ஆண்டுகளாக மறக்காது ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள் செய்யம் பணி ஆனால் இத்தினத்தில் தமிழன் அடையாள அட்டை, பொலிஸ் பதிவுப் புத்தகம் இன்றி வீதியில் வீதியில் நடமாட முடியாது. இதை ஒரு சுதந்திரநாள் என்ற சிறுகதை அறியப்படுத்துகின்றது. இதை வாசித்த போது அமரர் மு.தளையசிங்கத்தின் பெப்ரவரி 4 என்ற சிறுகதை நினைவில் நிறைந்தது.

சிங்கள யுவதி ஒருத்தி தமிழ் இளைஞன் ஒருவனோடு நேச உறவைப் பேணி தமிழனென அறிந்நதும் கருவேப்பிலையாக அவனைத் தூக்கி எறிகிறாள். இதைப்பற்றி மு.த. சாதி, சமயம், பாஷை என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்குள்ளேயே கையை வைக்கும் அளவுக்கு இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்து விட்டது. ஆக தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பின் சிறுகதைகள் இலக்கியத்தில் அவர் இலக்கியத்தில் அவர் சாதனை ஏற்படத்துவாரென்பதற்கு கட்டியம் கூறுகின்றது.

-சமரசன் ( மா.பா.சி)