Saturday, January 19, 2013

தெளிவத்தை ஜோசப்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...,

ஈழத்தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு ஆரோக்கியமான புதிய வரவு தேவமுகுந்தன்.

இவருடைய பத்துக் கதைகளடங்கிய சிறுகதைத் தொகுதி கண்ணீரினூடே தெரியும் வீதி...இமுதல் சிறுகதைத் தொகுதி இது.

பிரபல்யமிக்க பதிப்பகமான காலச்சுவடு 2012 ஆகஸ்டில் வெளியிட்டிருக்கும் நூல். காலச்சுவடு பதிப்பக வெளயிPடாக வந்திருப்பதும் தேவமுகுந்தனுக்கு ஒரு சிறப்பே. 1992 ல் தான் கதை எழுத ஆரம்பித்தேன் என்றும் அந்த முதல் கதைக்குப் பிறகு ஒரு பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகே 2008 லிருந்து மீண்டம் சிறுகதைகள் எழுதத் தொடங்கிதாகவும் குறிக்கும் தேவமுகுந்தன், அ. யேசுராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். உற்சாகத்தையும் செம்மைப்படத்தலின் அவசியத்தையும் ஏற்படத்தியவர் யேசுராசா என்றும் குறிக்கின்றார்.

பேராசிரியர் நுஃமானின் இவருடைய கதைகள் பற்றியதொரு விரிவான அறிமுகம் பின்னுரையாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட தேவராசா முகுந்தன் பிந்திய எண்பதுகளிலிருந்தே கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர். தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியபோதே அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று மலேசியாவில் பட்டமேற்படிப்புமுடித்துத் திரும்பி தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தத் தொகுதியில் பத்துக் கதைகள் இருக்கின்றன. அவைகளில் மூன்று கலைமுகத்திலும் இரண்டு கனடாவின் காலத்திலும் ஞானம், ஜீவநதி, தினக்குரல், யுகமாயினி, ஈழநாதம் ஆகியவைகளில் ஒவ்வொன்றுமாக வெளிவந்தவை.

1993ல் ஈழநாதத்தில் வெளிவந்த 'மரநாய்கள்' கதையே இவருடைய முதற்கதை. நூலின் கடைசிக் கதை. யாழ்ப்பாணத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒரேகதை இது. பட்டமேற்படிப்புக்காக மலேசியாவில் தங்கியிருந்தவர் தேவமுகுந்தன். மலேசியப் பின்புலத்தில் எழுந்துள்ள கதை இரட்டைக் கோபுரம்.

' எத்தனை மணிக்கு கொழும்பில் பிளைட் லாண்ட் பண்ணும்லா'

'கண்டிக்குப் யார் கூட்டிப்போவாங்கள்லா'

என்று 'லா' போட்டு; முடிக்கும் உரையாடல் மலேசியா. சிங்கப்பூரின் முத்திரை தேவமுகுந்தனும் முத்திரை பதிக்கின்றார்.

மற்ற எட்டுக் கதைகளும் கொழும்பு வாழ்வை மையமாகக் கொண்டவைகள். 1997 ல் தனது இருபதாவது வயதில் மரணித்த அன்புச் சகொதரன் நிர்மலனின் நினைவுகளிற்கு இந்த நூலை அர்ப்பணமும் செய்கின்றார் தேவமுகுந்தன்.

நிர்மலன் என்ற புனைபெயரில் இவருடைய சில சிறுகதைகள் வந்திருக்கின்றன. என் கையில் இவருடைய கண்ணீரினூடே தெரியும் வீதியும் கண்ணீரும் ஆழமான அர்த்தம் கொள்கின்றன. குறைவாக எழுதினாலும் நிறைவான கவனம் பெறும் தெவமகுந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுதி ஆழமான வாசிப்பைக் கோரி நிற்கும் ஒரு அருமையான தொகுதி. இலக்கிய அக்கறை கொண்டவர்கள் வாசிக்கவும் வைத்திருக்கவும் வேண்டிய நூல் 'கண்ணீரினூடே தெரிம் வீதி...'

-தெளிவத்தை ஜோசப்

நன்றி: வீரகேசரி 19.01.2013

No comments:

Post a Comment